''பிள்ளைகளிடம் திருமணம், திருமணம் எனக் கூறி தொந்தரவு செய்ய வேண்டாம். சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் நிறைய தவறான திருமணங்கள் நடக்கின்றன'' என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'.இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன், சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு நடிகர் சிம்பு பேசுகையில், “ஹெலிகாப்டரில் நான் வந்திறங்கவில்லை; வேண்டாம் என மறுத்துவிட்டேன். கௌதம் வாசுதேவ் மேனனுடன் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளேன். கௌதமுக்கும் எனக்கும் ஒரு மேஜிக் இருக்குன்னு நினைக்கிறேன். இந்தப் படத்துல, ரசிகர்களுக்கு புதுசா ஏதாவது கொடுக்கணும்னு நிறைய மெனக்கிட்டிருக்கார். கவுதம் ஒரு காதல் கதை பண்ணலாம்னுதான் முதலில் சொன்னார். வித்தியாசமா வேற ஏதாவது பண்ணலாம்னு சொல்லும்போதுதான், ஜெயமோகன் கதை கிடைச்சது.
புது பையன் நடிக்க வேண்டிய கதை என்றனர். அப்போது திடீரென அவர் இந்தக் கதையில 19 வயசு பையனா வரணும் என்று சொன்னார். பிறகு அதற்காக மெனக்கிடல்கள் செய்தேன். படத்தை பற்றி அதிகமாக சொல்ல விரும்பவில்லை. படம் முத்து என்ற ஒருவரின் பயணம். வெளியூரில் வந்து வேலை செய்யும் ஒருவரின் கதை. அவங்களுக்கு சமர்ப்பணம் பண்ற மாதிரி இந்தப் படம் இருக்கும். இந்த அனுபவம் உங்களுக்கு பிடித்திருந்தால் படம் வெற்றியடையும் என நினைக்கிறேன். க்ளைமேக்ஸில் உங்களுக்காக ஒரு விஷயம் உள்ளது அது உங்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன்.
» சிம்புவை புது ஹீரோவாக ‘மாற்றிய’ பின்புலம் - ‘வெந்து தணிந்தது காடு’ அனுபவம் பகிர்ந்த கௌதம்
பாடல் வெளியீட்டு விழாவில் என்ன பேசப்போகிறீர்கள் என்று நிறைய பேர் கேட்டார்கள். ஏன் அதை கேட்கிறீர்கள் என்று கேட்டேன். மாநாடு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அழுதீர்கள். இதிலும் அழுதால் படம் சென்டிமென்டாக ஹிட்டாகிவிடும் என கூறினார்கள். ஒருதடவ அழுதால் ஒவ்வொரு முறையும் அழுக வேண்டுமா? இப்போது ரசிகர்கள் என் கண்ணீரை துடைத்திருக்கிறார்கள். அதனால் தான் சந்தோஷமாக இங்கே வந்திருக்கிறேன்.
’மாநாடு’ என்னோட வெற்றி இல்லை. தமிழக மக்கள் கொடுத்த வெற்றி. மக்கள் வித்தியாசமான படங்களை பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார்கள். மக்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்துகொண்டு படம் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். சிம்புவுக்கு அட்டிடியூட் அதிகம் எனச் சொல்வார்கள். சத்தியமாக சொல்கிறேன் க்ராட்டிடியூட் தான் சிம்புவின் ஆட்டிடியூட் .
மாணவர்கள் இங்கே இருக்கிறீர்கள். யார் அட்வைஸையும் கேட்காதீர்கள். உங்களுக்கு நான் சொல்ல வரும் விஷயம், இன்றைக்கு நன்றியுணர்வு என்பது மறைந்துவிட்டது. நமக்கு யாராவது சிறிய உதவி செய்திருக்கலாம். நான் கூட நம்ம அதுக்கு தகுதியானதா இருக்கறதால, அவங்க உதவி பண்ணியிருக் காங்கன்னு நினைத்திருக்கிறேன்.
ஆனா, அது அப்படியில்லை. அவங்க நல்ல மனசுதான் நமக்கு அப்படி செய்ய வைத்திருக்கிறது. அப்படி யாராவது நமக்கு உதவியிருந்தால் அவர்களை மறந்துவிட வேண்டாம். நன்றியோடு இருக்க வேண்டும் என்பது தான் நான் சொல்லும் விஷயம். அம்மா, அப்பாவை பார்த்துக்கொள்ளுங்கள். கடைசி காலத்தில் கைவிட்டு விட வேண்டாம்.
ரசிகர்கள் பெருமைப்படும் அளவில் படங்களை கொடுப்பேன். நான் எல்லா பெற்றோரிடமும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். பிள்ளைகளிடம் திருமணம், திருமணம் என கூறி டார்ச்சர் செய்ய வேண்டாம். சமூகம் கொடுக்கும் அழுத்தங்களால் நிறைய தவறான திருமணங்கள் நடக்கின்றன. பிள்ளைகள் அவர்களின் வாழ்க்கையை பார்த்துக்கொள்ளட்டும். எல்லாவற்றையும் தாண்டி மேலே ஒருவர் இருக்கிறார் அவர் பார்த்து ஒருவரை அனுப்புவார். அதுவரை காத்திருப்போம்'' என்றார்.