சிம்புவை புது ஹீரோவாக ‘மாற்றிய’ பின்புலம் - ‘வெந்து தணிந்தது காடு’ அனுபவம் பகிர்ந்த கௌதம்

By செய்திப்பிரிவு

'இந்தப் படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். சிம்புவிடம் பணியாற்றுவதில் எப்போதும் நான் ஆர்வமாக இருந்திருக்கிறேன்'' என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் 'வெந்து தணிந்தது காடு'. இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. படத்தின் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் பேசுகையில், “இந்தக் கதைக்கு முன்பு நான் நடிகர் சிம்புவுடன் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தை இயக்க திட்டமிட்டிருந்தேன். பிறகு சிம்புவுடன் வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் பணிபுரிய வேண்டும் என்று தோன்றியது. எழுத்தாளர் ஜெயமோகன் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதையை எழுதி கொடுத்துவிட்டு புது ஹீரோ நடித்தால்தான் சரியாக இருக்கும் என்றார்.

நான் சிம்புவை புது ஹீரோவாக மாற்றிக் காட்டுகிறேன் என கூறினேன். இந்தக் கதையை சிம்புவிடம் கூறியதும் 'எப்போ ஷூட் போறோம். நான் வேற மாதிரி உருமாறி வர்றேன்' என்றார். இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம். சிம்புவிடம் பணியாற்றுவதில் எப்போதும் ஆர்வமாக இருந்திருக்கிறேன். படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கெனவே, ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்திற்காக மூன்று பாடல்களை இசையமைத்திருந்தார். இந்தக் கதை கேட்டதும், இதற்கு புதிய பாடல்களை மீண்டும் இசையமைக்க ஒப்புக்கொண்டார். இரவு இரண்டு மணிக்கு கூட பாடல், இசை தோன்றினால் தொலைபேசியில் அழைப்பார். ‘மறக்குமா நெஞ்சம்’ பாடல் உருவான போது இரவு 2.30. இந்த கதையில் ஆரம்பத்தில் காதலுக்கான இடம் இல்லாமல் இருந்தது. பின்னர் ஜெயமோகனிடம் விவாதித்து காதலை சேர்த்தேன்.

படத்தின் முதல் பாகத்திற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அடுத்த பாகம் இருக்கும். ‘வேட்டையாடு விளையாடு’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதைக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுடன் விவாதித்து வருகிறேன்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE