அவர் பாடல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் - பம்பா பாக்யா மறைவுக்கு திரையுலகம் புகழஞ்சலி

By செய்திப்பிரிவு

பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

49 வயதாகும் பாடகர் பம்பா பாக்யா, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சர்க்கார் திரைப்படத்தில் ‘சிம்டாங்காரன்’, 'எந்திரன் 2.0' படத்தில் 'புள்ளினங்காள்', 'பிகில்' படத்தில் 'காலமே காலமே' போன்ற பாடல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் பாடிய ‘ராட்டி’ ஆல்பம் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. அண்மையில் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ‘பொன்னி நதி’ பாடலின் ஆரம்ப வரிகளை பாடியிருந்தார். மேலும், இன்னொரு பாடலையும் இப்படத்தில் பாடியுள்ளார். இன்று அவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''பம்பா பாக்யாவின் திடீர் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த மாபெரும் இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தி அவர்கள் குடும்பத்திற்கு கிடைக்க நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

பிண்ணனி பாடகர் சித்ரா, ''பாடகர் பம்பா பாக்கியாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்'' என தெரிவித்துள்ளார்.

பாடலாசிரியர் விவேக், ''சிறந்த பாடகர் இன்று இல்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. 'புள்ளினங்கால்'பாடல் எப்போதும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். அவருடன் 'காலமே', 'சிம்ப்டாங்காரன்' பாடல்களுக்காக பணியாற்றியது சிறந்த அனுபவம்'' என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சாந்தனு தனது இரங்கலை பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE