தெலுங்கு பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி தனது ஆச்சார்யா படத்தின் தோல்வி குறித்து பேசினார்.
விழாவில், "கரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, திரையரங்குகளுக்கு வருபவர்கள் குறைந்துவிட்டார்கள் என்ற கவலை உள்ளது. ஆனால் மக்கள் ஒட்டுமொத்தமாக தியேட்டர்களுக்கு வர விரும்பவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல.
திரைப்படங்களின் கன்டென்ட் நன்றாக இருந்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களுக்கு வருகிறார்கள். பிம்பிசாரா, சீதா ராமம் மற்றும் கார்த்திகேயா 2 போன்ற படங்கள் இந்த ட்ரெண்டுக்கு சமீபத்திய சிறந்த எடுத்துக்காட்டுகள். எனவே சினிமாவில் உள்ள நாம் இனி நல்ல திரைக்கதை மற்றும் நல்ல உள்ளடக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும். அப்படி கவனம் செலுத்தவில்லை என்றால், பார்வையாளர்கள் நமது படங்களை நிராகரிப்பார்கள்.
சினிமாவின் தத்துவம் மாறிவிட்டது. நல்ல உள்ளடக்கம் கொண்ட படங்கள் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அதுதான் முக்கியமானது. மோசமான படங்கள் வெளியான இரண்டாவது நாளிலேயே நிராகரிக்கப்படுகின்றன. இந்த ட்ரெண்டுக்கு நானே சாட்சி. சமீபத்தில் வெளியான எனது படம் கூட திரையிட்ட 2வது நாளிலிருந்து நிராகரிக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.
» ஒரு வாரம் தாமதமாக வெளியாகும் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’
» ராதே ஷ்யாம் டு லைகர்: 2022-ல் படுதோல்வியடைந்த பான் இந்தியா படங்கள்
சிரஞ்சீவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஆச்சார்யா. தனது மகன் ராம் சரண் மற்றும் பூஜா ஹெக்டே உடன் நடித்திருந்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்தே இந்த கருத்தை பேசியுள்ளார்.