2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.
'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த அல்போன்ஸ் புத்திரன் சுமார் 7 ஆண்டுகள் கழித்து இயக்கும் படம் 'கோல்டு'. பிருத்விராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் பல முக்கிய நடிகர், நடிகைகள் கெஸ்ட் ரோலிலும், முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். பிரேமம் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரனே மேற்கொண்டுள்ளார். ஓணம் பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படத்தின் வெளியீடு ஒருவாரம் தள்ளிப்போகும் என இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் தரப்பில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக 'கோல்டு' திரைப்படம் ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரம் கழித்து வெளியாகிறது. தாமதத்திற்கு எங்களை மன்னியுங்கள். படம் வெளியான பின்பு இந்த தாமதம் எங்கள் வேலையின் மூலம் ஈடுசெய்யப்படும் என்று நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.