2 பாகமாக உருவாகும் வெந்து தணிந்தது காடு: கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. மும்பையில் நடக்கும் கதையான இதில், சித்தி இட்னானி நாயகியாக நடிக்கிறார். இரண்டாம் பாகத்துக்கான லீட் காட்சியை, சமீபத்தில் மும்பை சென்று படமாக்கி வந்திருக்கிறது படக்குழு.
செப்.8-ல் நயன்தாராவின் கோல்டு: இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன், 7 வருடங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘கோல்டு’. நயன்தாரா, பிருத்விராஜ் நடித்துள்ள இந்தப் படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகிறது. தமிழிலும் டப் செய்யப்பட்டுள்ள ’கோல்டு’ இங்கும் அதே நாளில் வெளியாகிறது.
மார்க் ஆண்டனி முதல் தோற்றம்: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம், ‘மார்க் ஆண்டனி’. ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா உட்பட பலர் நடிக்கும் இதன் முதல் தோற்ற போஸ்டர், விஷாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று வெளியானது. அதில் விஷால் முற்றிலும் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார்.
பா.ரஞ்சித்துக்கு பாராட்டு: பா.ரஞ்சித் இயக்கியுள்ள ’நட்சத்திரம் நகர்கிறது’ படம் புதன்கிழமை வெளியாக இருக்கிறது. இந்தப் படம் மும்பை திரை பிரபலங்களுக்கு சிறப்புக் காட்சியாக சமீபத்தில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த இயக்குநர் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ் ஆகியோர் பா.ரஞ்சித் மற்றும் படக்குழுவைப் பாராட்டியுள்ளனர்.
விஜய் சேதுபதி சம்பளம்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்கும் ‘ஜவான்’ படத்தில் வில்லனாக நடிக்கிறார், விஜய் சேதுபதி. இந்தப் படத்துக்காக அவர் ரூ.21 கோடி சம்பளம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் ஹீரோவாக நடிப்பதற்கு வாங்கும் சம்பளத்தை விட இது அதிகம் என்கிறார்கள்.
ரன்வீர் சிங் வாக்குமூலம்: நிர்வாணப் புகைப்படம் தொடர்பான வழக்கில், நடிகர் ரன்வீர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்தப் புகைப்படம் பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாக மும்பை செம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவகாசம் கேட்டிருந்த அவர், நேற்று நேற்று காவல் நிலையத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.