நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக்கும் ‘கொடுவா’

By செய்திப்பிரிவு

நடிகர் நிதின் சத்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நாயகனாக நடிக்கும் 'கொடுவா' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

'சென்னை28’, 'தோழா', 'சரோஜா' படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் நிதின் சத்யா. நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் நிதின் சத்யா நாயகனாக நடிக்கும் படம் 'கொடுவா'. துவாரகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் 'பிக்பாஸ்' புகழ் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார். 'பேச்சுலர்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் சாத்தையா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தவிர ஆடுகளம் நரேன், முருகதாஸ், சந்தான பாரதி, வினோத் சாகர், சுபத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ராமநாதபுரத்தை களமாக கொண்டு, அப்பகுதியில் வாழும் மக்களின் யதார்த்த வாழ்வியல் மற்றும் இறால் வளர்ப்பு பணியை செய்து வரும் கதாநாயகனின் வாழ்க்கையில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே 'கொடுவா' படமாக உருவாக உள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. படத்திற்கு தரண் குமார் இசையமைக்க, கார்த்திக் நல்லமுத்து ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் இயக்குநர் வெங்கட்பிரபு, தயாரிப்பாளர் 'ஐங்கரன்' கருணாமூர்த்தி, தயாரிப்பாளர் சுந்தர், இயக்குனர் ராஜேஷ் M செல்வா, நடிகர்கள் வைபவ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE