வீதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் சூட்டி கவுரவித்த கனடா | “இன்னும் அதிக தூரம் கடக்கணும்” - ரஹ்மான்

By செய்திப்பிரிவு

கனடா நாட்டின் மார்க்கம் நகரத்தில் உள்ள தெரு ஒன்றுக்கு ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மார்க்கம் நகரின் தெருவுக்கு தனது பெயர் சூட்டப்பட்டுள்ளதற்கு நன்றி தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் "இதை நான் என் வாழ்நாளில் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கனடா 'மார்க்கம்' நகரின் (Markham city) மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி, கவுன்சிலர், இந்திய தூதரக ஜெனரல் (அபூர்வா ஸ்ரீவஸ்தவா) மற்றும் கனடிய மக்கள் ஆகிய உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் என்பது என்ற பெயர் என்னுடையதல்ல. இதற்கு இரக்கமுள்ளவர் என்று பொருள். இரக்கம் என்பது பொதுவான கடவுளின் குணம், நம் அனைவரிடமும் அது உள்ளது. எந்த ஒரு நபரும் இரக்கமுள்ளவரின் பணியாளாக மட்டுமே இருக்க முடியும். எனவே, அந்தப் பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும்.

என்னுடன் பணியாற்றிய அனைத்து படைப்பாளிகளும், நான் உயர உத்வேகத்தை அளித்தனர். சினிமாவின் நூறாண்டுகளைக் கொண்டாடவும், எழுச்சி பெறவும் பழம்பெரும் ஜாம்பவான்கள் உத்வேகத்தை அளித்தார்கள். நான் கடலில் ஒரு மிகச்சிறிய துளி. மேலும் பலவற்றைச் செய்வதற்கும், சோர்வடையாமல், ஓய்வு பெறாமல், இன்னும் பலவற்றைச் செய்வதற்கும், ஊக்கமளிப்பதற்கும் இது எனக்கு மகத்தான பொறுப்பைக் கொடுப்பதாக உணர்கிறேன். ஒருவேளை நான் சோர்வடைந்தாலும், நான் இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டும், இன்னும் இணைத்துக்கொள்ள அதிகமான மக்கள் உள்ளனர், இன்னும் அதிக தூரம் கடக்க வேண்டியுள்ளது என்பதை நினைவில் கொள்வேன்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE