படத்தின் வெற்றி, தோல்விகள், உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில்எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்துள்ள படம், ’கோப்ரா’. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் னிதி ஷெட்டி,இர்பான் பதான், மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் உட்பட பலர் நடித்துள்ளனர். வரும் 31-ம்தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,இந்தி மொழிகளில் இந்தப் படம் வெளியாகிறது.
தமிழில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி, சென்னை, கொச்சி, பெங்களூரு, ஹைதராபாத்தில் நடந்துள்ளது. கொச்சியில் ஜெயின் கல்லூரி வளாகத்தில் 'கோப்ரா' குழுவினர், மாணவ, மாணவிகளை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அப்போது, ‘‘உங்களுக்கு ’அந்நியன்’ படம் பிடிக்கும் என்றால் இந்தப் படமும் பிடிக்கும். சயின்ஸ் பிக்சன், காமெடி, எமோஷன் காட்சிகளும் இருக்கின்றன. என் படங்கள் திரையரங்கில் வெளியாகி 3 வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது கோப்ரா வெளியாகிறது’’ என்றார்.
படத்தின் வெற்றி தோல்வி பற்றிய கேள்விக்கு பதிலளித்த விக்ரம், ‘‘படத்தின் வெற்றி தோல்விகள், உளவியல் ரீதியான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பெரும் போராட்டத்துக்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் படம் ரசிகர்களிடம் சென்றடையாத நேரங்களும் உண்டு. அது கடினமாக இருக்கும்’’ என்றார்.