இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பகாசூரன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 'பழைய வண்ணாரப்பேட்டை', 'திரௌபதி', 'ருத்ர தாண்டவம்' படங்கள் மூலம் கவனம் பெற்றவர் மோகன்.ஜி. அடுத்ததாக 'ஜிஎம் ஃபிலிம் கார்ப்பரேஷன்' தயாரிப்பில் உருவாகும் 'பகாசூரன்' படத்தை இயக்கி முடித்துள்ளார். இதற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் செல்வராகவன், நட்டி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
அண்மையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மோகன் ஜி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில், 'பகை முடிக்க வருகிறான் பகாசூரன்' என்று குறிப்பிட்டு 'பகாசூரன்' படத்தின் டீசர் வரும் 28-ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி?
பெண்களை கடத்தி கொலை செய்பவராக காட்சிப்படுத்தப்படுகிறார் இயக்குநர் செல்வராகவன். இந்த குற்றங்களை விசாரிக்கும் அதிகாரியாக நட்டி நடித்திருக்கிறார். டீசரில், 'ஒவ்வொரு பொண்ணும் பையனும் வீட்ல தனியா கதவ மூடிட்டு என்ன பண்றாங்கன்னு பெற்றோர் கவனிச்சா இந்த க்ரைம் குறையும்' என்கிறார். அப்படிப்பார்க்கும்போது இளைஞர்களை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டிருப்பது உணர முடிகிறது.
மேலும் காதல் என்ற பெயரில் இளம் தலைமுறையினர் சீரழிகிறார்கள் என்று மோகன்ஜியின் பழைய படங்களின் டச் இதிலும் இருப்பதை யூகிக்க முடிகிறது. கொடூரமான வில்லனாக செல்வராகவன் காட்டபட்டுகிறார். இடையில் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்' என்ற வசனம் மூலம் ஏதோ ஒரு பாதிப்பு அவரை இப்படி செய்ய தூண்டியிருக்கிறது என்பதை டீசர் உணர்த்துகிறது. டீசரில் லைட்டாக பிரசார பாணியிலான திரைக்கதை நெடி இருப்பதை நுகரமுடிகிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.