மலையாளம், தமிழில் வெளியாகும் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’ 

By செய்திப்பிரிவு

7 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்டு’ திரைப்படம் ஓணம் பண்டிகை அன்று வெளியாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல், தமிழிலும் படம் வெளியாகிறது.

2015-ம் ஆண்டு மே 29-ம் தேதி அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு பல வருடங்களாக அடுத்தப் படத்துக்கான பணிகளை மேற்கொண்டு வந்த அல்போன்ஸ் புத்திரன் சுமார் 7 ஆண்டுகள் கழித்து இயக்கும் படம் 'கோல்டு'. பிருத்விராஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்தப் படத்தில் மலையாள சினிமாவின் பல முக்கிய நடிகர், நடிகைகள் கெஸ்ட் ரோலிலும், முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். பிரேமம் இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் இந்தப் படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

கதை, திரைக்கதை, அனிமேஷன், ஸ்டன்ட் என அனைத்தையும் அல்போன்ஸ் புத்திரனே மேற்கொண்டுள்ளார். படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருந்த நிலையில், படம் செப்டம்பர் 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழிலும் படம் வெளியிடப்பட உள்ளது. 'மாநாடு', 'வலிமை' படங்களை வெளியிட்ட எஸ்எஸ்ஐ புரொடக்‌ஷனின் சுப்பையா சண்முகம் தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE