“ஆக்‌ஷன் மட்டுமல்ல... அழகான காதலும் உண்டு” - ‘கேப்டன்’ குறித்து ஆர்யா

By செய்திப்பிரிவு

'கேப்டன் ஆக்‌ஷன் படம் மட்டுமல்ல; அழகான காதல் கதை கொண்ட படம்' என்று நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் 'கேப்டன்'. இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரிஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் கோகுல் ஆனந்த், சுரேஷ் மேனன், பரத் ராஜ், அம்புலி கோகுல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ள இப்படம் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய டி.இமான், ''இந்தப் படத்தில் ஆர்யா கடின உழைப்பை கொடுத்துள்ளார். அது திரையில் தெரிகிறது. அதிகமாக கிராபிக்ஸ் இருக்க கூடிய கதைக்களத்தை தான் இயக்குநர் சக்தி கொண்டு வந்துள்ளார். அது மிகவும் கடினமான ஒரு காரியம். ஏனென்றால் கற்பனையான உருவத்தை இல்லாமலே இயக்க வேண்டும். அதற்கு இசையமைக்க வேண்டும். அது மிகவும் சவாலான காரியம். இயக்குநர் உடைய தெளிவான சிந்தனை தான் திரைப்படத்தை நேர்த்தியாக்கி இருக்கிறது. இந்த படத்தில் யுவன் ஒரு பாடல் பாடியுள்ளார்'' என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், ''நாங்கள் இந்தக் கதையை தயாரிப்பாளர் ஸ்வரூப்பிடம் கூறும்போது, அவர் எங்களை முழுதாய் நம்பினார். படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்தார். இயக்குநர் சக்தியின் சிறப்பு என்னவென்றால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒரு புது ஜானரை முயற்சிக்கிறார். கிராஃபிக்ஸ் காட்சிகளை எல்லாம் அவர் சிறப்பாக திரையில் கொண்டு வருவார். இந்த படத்தின் சண்டைகாட்சிகளை சிரத்தை எடுத்து செய்துள்ளோம். ஒரு பிரம்மாமண்ட மிருகத்துடன் சண்டை போடும் வகையில் இருக்கவேண்டுமென, அதற்கு ஏற்றார் போல் சண்டைக்காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஆக்‌ஷன் படம் என்றாலும், அதில் ஒரு அழகான காதல் கதை இருக்கிறது. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE