படங்கள் ஓடவில்லை என்றால் பாஜகவினர் மீது பழி போடுவதா? - நடிகர் அனுபம் கெர் ஆதங்கம்

By செய்திப்பிரிவு

அவரவர் திரைப்படங்கள் ஓடவில்லை என்றால் உடனே பாஜக அல்லது மோடி ஆதரவாளர்கள் மீது பழியை போடும் நீங்கள் மோசமான தோல்வியாளர்கள்'' என்று பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பாய்காட் ட்ரெண்டிற்கு எதிராக பாலிவுட் நடிகர்கள் ஆமீர்கான், டாப்ஸி, கரீனாகபூர், அக்ஷய்குமார், அர்ஜூன் கபூர் உள்ளிட்டோர் பேசிவரும் சூழலில், நடிகர் அனுபம் கேர், 'ஒருபடம் நன்றாக இருந்தால், பாய்காட் அந்த படத்தை எந்த வகையிலும் பாதிக்காது' என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'பாய்காட் ட்ரெண்டால் திரைப்படங்கள் வெற்றிப்பெறாது என கூறுவது ஒரு முட்டாள்தனம்.

இரண்டு-மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை மக்கள் பார்க்கும் வகையில் ஏதாவது ஒரு சர்ச்சையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினர்.நானும் அதில் ஒருவன் என்பதை அறிவேன். தற்போது பாய்காட் ட்ரெண்டிங்கில் உள்ளது. எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு. ஒரு குறிப்பிட்ட படத்தைப் பார்க்க விரும்பவில்லை என்று சிலர் நினைத்தால் அது அவர்களின் உரிமை. ஒரு படம் நன்றாக இருந்தால், பார்வையாளர்கள் அதை ரசிக்கிறார்கள். நன்றாக இருந்தும் யாரும் பார்க்காமல் இல்லை'' என்றார்.

தொடர்ந்து, 'காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் பிரதமர் மோடி அரசாங்கத்தால் தான் ஹிட்டானது என்ற கேள்விக்கு, ''அப்படி பிரதமர் மோடியின் அரசாங்கத்தால் படம் வெற்றியடைகிறது என்றால், அவரது பயோபிக் ப்ளாக்பஸ்டர் ஹிட் படாகியிருக்கும். அவரவர் திரைப்படங்கள் ஓடவில்லை என்றால் உடனே பாஜக அல்லது மோடி ஆதரவாளர்கள் மீது பழியைப் போடும் நீங்கள் மோசமான தோல்வியாளர்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE