சிறுத்தை சிவாவுடன் நடிகர் சூர்யா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
ரஜினியின் 'அண்ணாத்த' திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யாவுடன் இணைகிறார். 'சூர்யா 42' என அழைக்கப்படும் இந்தப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடிக்கிறார். இந்தப் படத்தைத் தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் மற்றும் தமிழின் ஸ்டூடியோ க்ரீன் இணைந்து தயாரிக்கிறது.
முதன்முறையாகத் தமிழுக்கு வருகிறார் திஷா பதானி. படத்திற்குத் தேவி ஶ்ரீபிரசாத் இசையமைக்கிறார். சூர்யாவின் 'சிங்கம்', 'சிங்கம் 2' ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் அவருடன் கைகோக்கிறார். ஒளிப்பதிவை சிவாவின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் வெற்றி கவனிக்கிறார்.
இப்படத்தின் பூஜை சென்னை ராமாபுரத்தில் உள்ள அகரம் அறக்கட்டளையில் நடந்தது. இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு கோவாவில் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் படக்குழு கோவாவில் ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் தங்கியிருந்து பிரம்மாண்டமான செட்டில் படப்பிடிப்பை நடத்தவுள்ளது.