தென்னிந்திய திரைப்படங்கள் பாலிவுட்டில் வசூல் குவித்து வருவதும் இந்திப் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஒரு காலத்தில் தொடர் ஹிட் கொடுத்து உச்சத்தில் இருந்த அக் ஷய் குமார் நடிப்பில் இப்போது, மாதம் ஒரு படம் வெளியாகி தோல்வியைத் தழுவுகிறது. இந்நிலையில் பூமி பட்னேகருடன் அவர் நடித்து கடந்த 11-ம் தேதி வெளியான ‘ரக் ஷா பந்தன்’ படமும் மோசமான தோல்வியைத் தழுவி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதே போல, அமீர்கானின் ‘லால் சிங் சத்தா’ படமும் கடந்த 11-ம் தேதிவெளியாகி, வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படங்களைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வராததால், சுமார் 30 சதவீத காட்சிகள் கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், பிவிஆர் சினிமாஸ் ஒரு சலுகையை அறிவித்தது.
அதன்படி, இந்தப் படங்களுக்கு மூன்று டிக்கெட் வாங்கினால், ஒரு டிக்கெட் இலவசம் என்று அறிவித்திருந்தது. இந்தச் சலுகை 16-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரசிகர்கள் அதிகம் வரலாம் என எதிர்பார்த்தனர். ஆனால், வரவில்லை. இது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.