தமிழில், விவேக் ஹீரோவாக நடித்த ‘பத்தாயிரம் கோடி’ படத்தில் நடித்தவர் கனிஷ்கா சோனி. இதையடுத்து தெலுங்கு, இந்தியில் நடித்த கனிஷ்கா, டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார். குஜராத்தைச் சேர்ந்த இவர் சில நாட்களுக்கு முன், “நான் என்னையே திருமணம் செய்துகொண்டேன். எனக்கு எந்த ஆணும் தேவையில்லை. சிவனும் சக்தியும் என்னுள் இருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையவாசிகள் அவரை சரமாரியாக விமர்சித்தனர்.
இதற்கு பதிலளித்த அவர், “இந்திய கலாச்சாரத்தை உண்மையாகவே நம்புகிறேன். திருமணம் என்பதும் உடலுறவு தொடர்புடையது மட்டுமல்ல. அதில் காதலும் நேர்மையும் வேண்டும். இப்போது அதுபோன்று இருப்பதாக நம்பிக்கையில்லை. அதனால் சுய நினைவோடுதான் என்னை நானே திருமணம் செய்துகொண்டேன். இப்போது அமெரிக்காவில் இருக்கிறேன். ஹாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.