கங்கனாவின் ‘எமர்ஜென்சி’ அப்டேட்: இந்திரா காந்தியின் தோழி கதாபாத்திரத்தில் மஹிமா சவுத்ரி

By செய்திப்பிரிவு

மும்பை:'எமர்ஜென்சி' திரைப்படத்தில் இந்திரா காந்தியின் தோழி புபுல் ஜெய்கர் கதாபாத்திரத்தில் நடிக்கும் மஹிமா சவுத்ரியின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகும் படம் 'எமர்ஜென்சி'. இந்தப் படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதுகிறார் ரித்தேஷ் ஷா.

படத்தின் முதல் பார்வையை டீசராக படக்குழு சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெயர்கள் வெளியிடப்பட்ட நிலையில், இந்திரா காந்தியின் உற்ற தோழியாக இருந்த புபுல் ஜெய்கர் கதாபாத்திரத்தில் மஹிமா சவுத்ரி நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று அதிகாரபூர்வமாக புபுல் ஜெய்கர் தோற்றத்தில் மஹிமா சவுத்ரி இருக்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

எழுத்தாளரான புபுல் ஜெய்கர், இந்திரா காந்தியின் சுயசரிதை புத்தகத்தையும் எழுதியவர். இந்திரா காந்தியிம் புபுல் ஜெய்கரும் இளமைப் பருவம் முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியான புபுல் ஜெய்கர் கதாபாத்திரத்தில் நடிப்பது கவுரவமிக்கது என்று மஹிமா சவுத்ரி தெரிவித்துள்ளார்.

ஷாரூக்கானின் ‘பர்தேஸ்’ படம் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தவர் மஹிமா சவுத்ரி என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE