''உங்களின் பாய்காட் ஆமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கிறது'' என நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஓன்றில், ''ஒரு படத்தில் நடிகர், இயக்குநர் மற்றும் நடிகையைத் தவிர, வேறு பல முக்கியமான கதாபாத்திரங்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன். 200, 300 நடிகர்கள் வேலை செய்கிறார்கள். அனைத்துப் பிரிவுக்கும் ஊழியர்கள் இருக்கிறார்கள்.
அதனால், ஒரு திரைப்படம் பலருக்கு வேலை வாய்ப்பையும், பலருக்கு வாழ்வாதாரத்தையும் தருகிறது. ஆமீர்கான் 'லால் சிங் சத்தா'வை உருவாக்குகிறார் என்றால், ஒரு நட்சத்திரமாக அவரது பெயர் படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், அதில் 2000, 3000 குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்டிருக்கிறது.
நீங்கள் 'லால் சிங் சத்தா' படத்தை புறக்கணிக்கும்போது, அதன்மூலம் நீங்கள் ஆமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. மாறாக, நீங்கள் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வேலை மற்றும் வாழ்வாதாரத்தையும் சேர்த்தே பாதிக்கிறீர்கள். பாய்காட் எதற்காக, ஏன் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், தவறான புரிதலுக்காக நடக்கிறது. நீங்கள் அமீர்கானை மட்டும் பாதிக்கவில்லை. கூடவே பொருளாதாரத்தை பாதிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளவும்'' என்று கூறியுள்ளார்.