வங்க நாவலைத் தழுவி உருவாகும் 1770

By செய்திப்பிரிவு

எஸ்.எஸ்.ராஜமவுலியிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அஷ்வின் கங்கராஜு. இவர் ‘ஆகாசவாணி’ என்ற தெலுங்கு படத்தை இயக்கி இருந்தார். அடுத்து , வங்க எழுத்தாளர், பக்கிம் சந்திரசட்டர்ஜியின் ‘ஆனந்த மடம்’ என்ற வரலாற்று நாவலைத் தழுவி '1770' என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், சைலேந்திர குமார், சுஜாய் குட்டி, பி. கிருஷ்ணகுமார் மற்றும் சூரஜ் சர்மா இணைந்து தயாரிக்கின்றனர். எழுத்தாளரும், இயக்குநருமான ராம் கமல் முகர்ஜியும் இதில் இணைந்துள்ளார். இந்த ஆண்டு, ‘வந்தே மாதரம்’ என்ற பாடல் பிறந்து 150 ஆண்டுகள் ஆகிறது. இந்தப் பாடல், ‘ஆனந்த மடம்’ நாவலில்தான் முதன் முதலாக இடம் பெற்றது. அதைக் குறிக்கும் வகையில், மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

படம் பற்றி இயக்குநர் அஸ்வின் கங்கராஜு கூறும்போது, ‘‘இந்தப்படம் எனக்குப் பெரிய சவாலாக இருந்தது. ஆனால் இந்தியாவின் பிரபலமான கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எளிமைப்படுத்தியதால், இது மாபெரும் வெற்றி படைப்பாக உருவாகும் என நினைக்கிறேன்’’ என்றார்.

இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் வங்காள மொழிகளில் உருவாகிறது. தீபாவளி அன்று படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE