மணிரத்னம் இயக்கத்தில் தயாராகிவரும் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான 'சோழா சோழா' பாடல் வரும் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்கியுள்ளார் இயக்குநர் மணிரத்னம். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என பலர் நடிக்கின்றனர்.
இப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. லைகா புரொடக்ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.அண்மையில் வெளியான படத்தின் டீசரும், 'பொன்னி நதி பாக்கணுமே' பாடலும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
» விசாகப்பட்டினத்தில் அஜித், விஜய் படப்பிடிப்பு - ரசிகர்களின் புதிய எதிர்பார்ப்பு
» ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலினை வைத்து வெளியிட திட்டமா?
இது தொடர்பாக மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், ''வெற்றிக் கொண்டாட்டம். ஆகஸ்ட் 19-ம் தேதி ‘சோழா சோழா’ இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடல் போஸ்டரில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் குதிரையில் அமர்ந்திருப்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.