25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் ஜானி டெப்

By செய்திப்பிரிவு

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் 25 ஆண்டுகளுக்குப் பிறகு படம் ஒன்றை இயக்குகிறார். இத்தாலிய கலைஞரான அமெடியோ மோடிக்லியானியின் வாழ்க்கை வரலாற்றை அவர் இயக்கவுள்ளார்.

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமடைந்தவர் ஹாலிவுட் நடிகர் ஜானி டெப். அவரது நடிப்பும், கெட்டப்பும், ஜாக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரத்தின் பெயரும் அவருக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி கொடுத்தது. இவர் கடந்த 2015-ம் ஆண்டு நடிகை ஆம்பர் ஹெர்ட்டை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த நிலையில், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை பூதாகரமாக வெடித்தது.

அதில் அவர், திருமண உறவில் தான் வன்முறையால் பாதிக்கப்பட்டேன் என்று கூறியிருந்தார். அந்தக் கட்டுரை, தன்னையும் தன் தொழிலையும் பாதித்ததாகக் கூறி, 50 மில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்குத் தொடுத்தார் ஜானி டெப். ஆம்பர் ஹெர்ட்டும் வழக்குத் தொடர்ந்தார். வழக்கின் முடிவில் ஜானி டெப்புக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதனால், ஜானி டெப்புக்கு ஹாலிவுட்டில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகின.

கடந்த 1997-ம் ஆண்டு மே 10-ம் தேதி அவரது இயக்கத்தில் 'தி பிரேவ்' என்ற படத்தை இயக்கினார். தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு, இத்தாலியின் பிரபல ஓவியரும் சிற்பியுமான அமெடியோ மோடிக்லியானி (Amedeo Modigliani)யின் வாழ்க்கை கதையை டெப் இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை பிரபல நடிகர் அல் பசினோ தயாரிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE