மீண்டும் இயக்குநர் ஆனது ஏன்? - தம்பி ராமையா நேர்காணல்

By செய்திப்பிரிவு

நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் தம்பி ராமையா, முரளி நடித்த ‘மனுநீதி’, வடிவேலு நடித்த ‘இந்திரலோகத்தில் நா அழகப்பன்’, தனது மகன் உமாபதி நடித்த ‘மணியார் குடும்பம்’ ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இப்போது ‘ராஜாகிளி’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இயக்குநர் ஆகியிருக்கிறார்.

மீண்டும் இயக்குநர் ஆக காரணம் என்ன?

ஒரு படைப்பாளன் மனசுல, கதை உருவானா, அது எப்பவும் அவனைத் தூண்டிக்கிட்டே இருக்கும்னு சொல்வாங்க. எனக்குள்ளும் ஒரு கதை அதை செஞ்சுட்டு இருந்தது. அதனால நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மீண்டும் படம் இயக்க வந்துவிட்டேன். அதுமட்டுமில்லாம, இந்தக் கதையை நான் இயக்கினா மட்டுமே சரியா இருக்கும்னு சொன்னாங்க. ‘இந்தக் கதையை யாரும் திருடிட்டுபோனா கூட, எந்த வேகத்துல திருடினாங்களோ, அதே வேகத்துல திருப்பிக் கொண்டு வந்து வச்சிருவாங்க’ன்னு ஒரு இயக்குநர் சொன்னார். இந்தக் கதையை மத்தவங்க இயக்கினா சரியா வராதுங்கறதால, நானே இயக்க முடிவு பண்ணினேன்.

அப்படி என்ன கதை?

இது ஒரு மனுஷனோட கதை. படம் பார்க்கும் எல்லாருக்கும் இது யாரோட கதையா இருக்கும்கறதைப் புரிஞ்சுக்க முடியும். ஒரு வாழ்க்கையை பார்த்த அனுபவத்தை இந்தப் படம் கொடுக்கும். இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சர்யப்பட்டால், அது உண்மைன்னு சொல்றதுக்கு சம்பவங்கள் இருக்கு. எல்லா வயதினருக்குமான கேரக்டர்களும் படத்துல இருக்கும்.

சமுத்திரக்கனியோட இதுலயும் இணைஞ்சிருக்கீங்க?

அவருக்கும் எனக்கும் சிறந்த நட்பு இருக்கு. அவர் கூட நான் நடிச்ச, ‘சாட்டை’, ‘அப்பா’, ‘விநோதய சித்தம்’ படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இந்தப் படத்துல மீண்டும் இணைஞ்சிருக்கோம். இதுவரை அவர் இயக்கிய படங்கள்ல நான் நடிச்சேன். இப்ப நான் இயக்குறேன். அவர் நடிக்கிறார். இரண்டு பேருக்குமே கதையில முக்கியத்துவம் இருக்கு. தமிழ்ப் பேசத் தெரிந்த நடிகை வேணுங்கறதால சுவேடா ஷ்ரிம்ப்டன், மியாஸ்ரீ சவுமியா ஆகியோரை தேர்வு பண்ணியிருக்கோம்.

‘மாநாடு’ தயாரிப்பாளர் இதை எப்படி தயாரிக்க முன் வந்தார்?

தமிழ் சினிமாவில கதைபற்றிய அறிவு கொண்ட, தயாரிப்பாளர்கள்ல, சுரேஷ் காமாட்சியும் ஒருத்தர். அவரும் இயக்குநர்ங்கறதால இந்தக் கதையை புரிஞ்சுக்கிட்டு, தயாரிக்க முன் வந்தார். அவர், 12 இயக்குநர்கள்ட்ட இந்தக் கதையை சொல்லி இருக்கிறார். எல்லாருமே பாராட்டி இருக்காங்க.

இதுல உங்கள் மகன் உமாபதி நடிக்கிறாரா?

இல்லை. இணை இயக்குநரா ஒர்க் பண்றார். இயக்கம் பற்றி இன்னும் புரிஞ்சுக்கறதுக்காக, இணைஞ்சிருக்கார். இந்தப் படம் 50 சதவீதம் கதை, 50 சதவீதம் நடிப்புங்கற கான்செப்டை கொண்டது. கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். தினேஷ் இசை அமைக்கிறார். இந்த மாத இறுதியில படப்பிடிப்பு தொடங்குது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE