‘ஜெயிலர்’ அப்டேட்: 23 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படத்தில் ரம்யாகிருஷ்ணன்

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினியுடன் அவர் இணைந்து நடிப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

கடந்த 1999-ம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த படம் 'படையப்பா'. இந்தப் படத்தில் 'நீலாம்பரி' கதாபாத்திரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். காலம் கடந்தும் நினைவில் நிற்கும் கதாபாத்திரம் அது. அதன்பிறகு ரம்யாகிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்து நடிக்கவேயில்லை. மீண்டும் அப்படியொரு காம்போ இணைய வேண்டும் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர்.

அந்த எதிர்பார்ப்பு 'ஜெயிலர்' படத்தின் மூலம் நிறைவேற உள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. அண்மையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் 'படையப்பா' படத்திற்கு பிறகு 23 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளார் ரம்யா கிருஷ்ணன்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிப்பவர்கள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், ஐஸ்வர்யா ராய் படத்தில் நடிக்க இருப்பதாகவும், சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE