''இந்தி படங்களையாவது விட்டு வைக்கலாம் என நினைத்திருந்தேன். ஆனால், ஆமீர்கான் கேட்டதும் தமிழ்நாட்டுல் 'லால் சிங் சத்தா' படத்தை வெளியிட ஒப்புக்கொண்டேன்'' என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி ஆமீர்கான் நடித்துள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தப்படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப்படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ''நான் ஆமீர்கானின் மிகப்பெரிய ரசிகன். அவரது படத்தை தமிழ்நாட்டில் வெளியீடுவது எனக்கு பெரும் மகிழ்ச்சி. நிறைய படங்களை நாமே ரீலிஸ் செய்கிறோமே கொஞ்சம் இடைவெளி விடலாம் என்று நினைத்தேன்.
அப்போது தான் 'லால் சிங் சத்தா'வை ரிலீஸ் செய்ய என்னை தொடர்பு கொள்ள உள்ளதாக தகவல் அறிந்தேன். வேண்டாம் இந்தி படத்தையாவது விட்டு வைப்போம் என நினைத்திருந்தேன். திடீரென்று ஒருநாள் கால் வந்தது. அதுவும் ஆமீர்கானே நேரடியாக வீடியோ காலில் பேசினார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர் கேட்டவுடன் நான் ஓகே சொல்லிவிட்டேன். பிறகு படத்தைப் பார்த்தேன். படம் சிறப்பாக வந்ததுள்ளது. ஆமீர்கான் மீண்டும் தன்னை உலக சினிமாவில் சிறந்த நடிகராக நிரூபித்துள்ளார். அவர் 30 ஆண்டுகளாக பான் இந்தியா நட்சத்திரமாக ஜொலித்துவருகிறார். தமிழ் மக்கள் படத்தை கண்டிப்பாக கொண்டாடுவார்கள்'' என்றார்.