குடும்பங்கள் கொண்டாடும் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன் - அக்‌ஷய் குமார்

By செய்திப்பிரிவு

''குடும்பங்கள் கொண்டாடும் வகையில், வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன்'' என்று பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் படம் 'ரக்சா பந்தன்'. அண்ணன் தங்கை பாசத்தை அடிப்படையாக கொண்டு காமெடி ட்ராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 11-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், படம் தொடர்பான ப்ரமோஷனில் அக்‌ஷய் குமார் பேசுகையில், ''நான் வித்தியாசமான படங்களில் நடிக்க விரும்புகிறேன். எந்தவித குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் என்னை அடைக்க நான் விரும்பவில்லை. ஆனால், நான் நடிக்கும் வித்தியாசமான படங்கள் ஃபேமிலி ஆடியன்ஸை திருப்திபடுத்தும் வகையில் அமைய வேண்டும் என்பது தான் என் நிபந்தனை.

இழிவான அருவருக்கத்தக்க படங்களில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. சைக்கோ த்ரில்லரோ, சமூக அக்கறை கொண்ட படங்களோ, எதுவாக இருந்தாலும் அதனை எந்தவித தயக்கமும் இல்லாமல் குடும்பங்கள் கண்டுகளிக்கும் வகையில் படங்களை உருவாக்க வேண்டும். கருத்துடன் கூடிய, வணிக ரீதியான கமர்ஷியல் படங்களால் குடும்பங்கள் கொண்டாடும் படங்களில் நடிக்க வேண்டும்'' என்றார்.

அவரது நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ரக்சா பந்தன் படம் குறித்து பேசிய அவர், "சமூகத்திற்கும் நம் குடும்பங்களுக்கும்" ஒரு முக்கியமான படம். "இது உடன்பிறப்புகளுக்கு இடையிலான பிணைப்பைப் பேசும்" என்றார். தொடர்ந்து, ''என் தங்கை தான் எனக்கு எல்லாமே. எங்களுக்குள் ஒரு நீண்ட பிணைப்பு இருக்கிறது. குடும்பமாக நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இப்போதிருக்கும் பணம் இல்லாத காலத்திலேயே அதாவது மும்பையின் கோலிவாடா பகுதியில் வசித்தபோது, நானும், என் தங்கச்சியும் இன்னும் கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தோம்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE