“விரைவில் சந்திக்கிறேன்...” - லெஜண்ட் சரவணன் உற்சாக ட்வீட்

By செய்திப்பிரிவு

''விரைவில் சந்திக்கிறேன்..சந்திக்கிறோம்'' என 'தி லெஜண்ட்' படத்தின் நாயகன் அருள் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கவனம் ஈர்த்த இந்தப் பதிவின் மூலம் அவர் ‘சக்சஸ் மீட்’ வைப்பது உறுதியாகியுள்ளது.

ஜெடி - ஜெர்ரி இயக்கத்தில் அருள் சரவணன் அறிமுக நடிகராக நடித்துள்ள படம் 'தி லெஜண்ட்'. இந்தப் படம் கடந்த ஜூலை மாதம் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஊர்வசி ரவுடேலா, கீதிகா திவாரி, சுமன், விவேக், யோகிபாபு, நாசர், ரோபோ ஷங்கர் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்திருந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பான் இந்தியா முறையில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 600-க்கும் அதிகமான திரைகளில் வெளியானது. ரூ.45 கோடி செலவில் உருவான 'தி லெஜண்ட்' உலக அளவில் முதல் வார முடிவில் ரூ.6 கோடி ரூபாய் வசூலித்தது. படத்தின் முதல் நாள் வசூல் ரூ.2 கோடியை கடந்ததாக தகவல் வெளியானது. தற்போதும் சில திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மொத்த வசூல் ரூ.10 கோட்டியை தொட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், அருள் சரவணன் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஊடக நண்பர்களுக்கு வணக்கம்…உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி!!! விரைவில் சந்திக்கிறேன்...சந்திக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.

அவரது இந்தப் பதிவின் மூலம் அவர் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட உள்ளாரா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், அவர் 'தி லெஜண்ட்' படத்துக்காக ‘சக்சஸ் மீட்’ வைக்கவுள்ளதாக தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE