“செஸ் ஒலிம்பியாட் விழாவுக்காக பாடகர் அறிவை பலமுறை அழைத்தோம்” - விக்னேஷ் சிவன் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: “செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவுக்காக பாடகர் அறிவை பலமுறை அழைத்தோம்” என்று இயக்குநர் விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு 'எஞ்சாயி எஞ்சாமி' சுயாதீன பாடல், இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் தயாரிப்பில் பாடகர்கள் அறிவு, தீ குரலில் வெளியானது. இப்பாடல் வெளியானது முதலே இணையத்தில் டிரெண்டாகி பெரும் வெற்றி பெற்றது. யூடியூபில் இதுவரை இப்பாடலுக்கு 42 கோடிக்கும் அதிகமான பார்வைகளை கிட்டியுள்ளன.

இந்த நிலையில், சமீபத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அப்பாடலை பாடகி தீ பாடி அசத்தியிருந்தார். எனினும், இப்பாடலின் முக்கிய அங்கமாக கருதப்படும் சுயாதீன பாடல் கலைஞரான அறிவு, செஸ் ஒலிம்பியாட் நிகழ்வில் பங்கேற்கவில்லை. இதுகுறித்து பலரும் எஞ்சாயி எஞ்சாமி பாடலின் வெற்றிக்கு காரணமாகி இருந்த அறிவு புறக்கணிப்படுகிறாரா என்று சமூக வலைதளங்களில் கேள்வி எழும்பியிருந்தனர்.

இந்த நிலையில், பாடகர் அறிவு தான் புறக்கணிக்கபடுவது குறித்து இன்ஸ்டா பதிவில் பகிர்ந்திருந்தார். இந்த பதிவு வைரலானது. இதனைத் தொடர்ந்து 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலின் தயாரிப்பாளர் சந்தோஷ் நாரயணன், பாடகி தீ ஆகியோர் தங்கள் தரப்பு வாதங்களையும் பொதுவெளியில் முன்வைத்தனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் தயாரிப்புக்குழுவை வழிநடத்திய இயக்குநர் விக்னேஷ் சிவன் பதிலளித்திருக்கிறார்.

இது குறித்து பேட்டி ஒன்றில் விக்னேஷ் சிவன் கூறும்போது, “செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்க ஒன்றுக்கு பலமுறை அழைத்தோம். ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்ததால் அதில் பங்கேற்க முடியாது என்றார்.

எனினும், நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு மீண்டும் வெளிநாடு திரும்புவதற்கு கூட தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் தயார் என்றே கூறினோம். ஆனால், அவரால் வர முடியவில்லை.

நான் அறிவின் ரசிகன். அவர் திறமைசாலி. ஆகவே, அப்பாடலில் அறிவு இடத்தில் நாங்கள் யாரையும் மாற்றாக பயன்படுத்தவில்லை. எங்கள் நிகழ்ச்சி தயாரிப்புக் குழுவுக்கும், அறிவுக்கும் எந்த கருத்தியல் வேறுபாடும் இல்லை” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE