'பத்து தல' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' உள்ளிட்ட படங்களை இயக்கி ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் 'பத்து தல'. பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், கலையரசன், மலையாள நடிகை அனு சித்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஒருமாதத்திற்கு முன்பு அதாவது கடந்த ஜூன் 30-ம் தேதி 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் சார்பில் அதன் ட்விட்டர் பக்கத்தில், படம் டிசம்பர் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, படபிடிப்பு தளங்கள் குறித்து இயக்குநர் பேசுகையில், 'பெல்லாரியில் 20 நாட்கள் ஷூட்டிங் முடிந்த பின்னர், திருசெந்தூரில் 10 நாட்கள் ஷூட்டிங் நடைபெறும். சென்னையில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தவும் திட்டம் உள்ளது' என்று தெரிவித்திருந்தார்.
» 'சிலர் அப்படி நினைப்பது தவறு; என் படத்தை புறக்கணிக்காதீர்கள்' - அமீர்கான் உருக்கம்
» நடிகர் சல்மான் கான் துப்பாக்கி வைத்துக்கொள்ள மும்பை போலீஸ் அனுமதி
இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில், 'ஷூட்டிங் இன் ப்ராக்ரஸ்..பத்து தல' என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் 'பத்து தல' படப்பிடிப்பு தொடங்கியிருப்பதை நடிகர் சிம்பு உறுதி செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதனிடையே, இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் முதல் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சிம்பு தன் தந்தையின் மருத்துவச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றதால் படப்பிடிப்பில் சிம்புவால் கலந்து கொள்ளமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.