நாயகன் மீண்டும் வர்றார்... திரையுலகில் பிஸியாகும் கமல் - ஒரு விரைவுப் பார்வை

By செய்திப்பிரிவு

நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மகத்தான வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இதையடுத்து அடுத்தடுத்த புராஜெக்ட்டுகள் மூலம் அவர் திரையுலகில் தற்போது பிஸியாகியுள்ளார்.

2018-ம் ஆண்டு வெளியான 'விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு ஒரு பெரிய கேப். அரசியலில் ஆழம் பார்க்க இறங்கிய கமலை லோகேஷ் கனகராஜின் 'விக்ரம்' கைகொடுத்து திரைத்துறைக்கு மீண்டும் கொண்டு வந்து சேர்த்தது. படத்தின் தாறுமாறான வரவேற்பு, கரோனா காலத்திற்கு பிறகான தமிழ்ப் படத்தின் உச்சபட்ச வசூல் சாதனையை நிகழ்த்தியது.

ரூ.400 கோடி வசூல் என்பது தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளமாக மாறியுள்ளது. இந்த வெற்றி கமலை அடுத்தடுத்த படங்களை நோக்கி நகர்த்தியிருக்கிறது. இதன் மூலம் மீண்டும் திரையுலகில் நடிகர் கமல் பிஸியாகியுள்ளார். 'விக்ரம்' கொடுத்த உந்துதலின் பேரில் 'நாயகன் மீண்டும் வர்றார்' என்ற பாடலுக்கேற்ப அடுத்தடுத்த புராஜக்ட்கள் மூலம் மாஸ் என்ட்ரி கொடுக்க உள்ளார்.

இந்தியன் 2 - ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படம் சில பிரச்சினைகள் காரணமாக தற்காலிமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது, மீண்டும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி செப்டம்பர் முதல் வாரம் படத்தின் ஷூட்டிங் தொடங்கலாம் என கூறப்படுகிறது. இதில் தொடக்கத்தில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக தீபிகா படுகோன் அல்லது கேத்ரினா கைஃபை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

மகேஷ்நாராயணனுடன் - 'டேக்ஆஃப்', 'சி யூ சூன்', 'மாலிக்' படங்களின் மூலம் கவனம் ஈர்த்த மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணனுடன் இணைகிறார். சொந்த தயாரிப்பு நிறுவனமான 'ராஜ்கமல்' மூலம் படத்தை தயாரித்து நடிக்கிறார். மகேஷ் நாராயணனை பொறுத்தவரை, கமலின் முந்ததையப் படங்களான 'விஸ்வரூபம்', 'விஸ்வரூபம்2' இரண்டு படங்களில் எடிட்டராக பணிபுரிந்தவர். இந்தப் படத்தில் கமலுடன், மீண்டு ஃபஹத் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பா.ரஞ்சித்துடன்... - அடுத்து மதுரையைக் களமாக கொண்டு பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் கமல் நடிக்கிறார். விக்ரம்61 படத்தில் முடித்த பிறகு, கமலுடன் பா.ரஞ்சித் இணைவார் என கூறப்படுகிறது.

ஹெச்.வினோத்? - தற்போது அஜித்தின் 'ஏகே61' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார் ஹெச்.வினோத். படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்தப் படத்தை அடுத்தைத் தொடர்ந்து அரசியலை மையமாக கொண்ட கதை ஒன்றை உருவாக்கியிருக்கும் ஹெச்.வினோத், கமலை சந்தித்து கதையை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் கதையில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள கமல், இந்தப் படத்தையும் ராஜ்கமல் நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் லோகேஷ் - இந்தப் படங்களுக்கிடையே மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் ‘விக்ரம்’ படத்தின் அடுத்த பாகத்தில் கமல் நடிக்க உள்ளார். இதில் கார்த்தி, சூர்யா, கமல் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.


தயாரிப்பாளர் கமல்: அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய கமல், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து, 'ரங்கூன்' பட புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படத்தையும் நடிகர் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல் மீண்டும் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களுடன் கைகோத்து நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE