ஒரே நேரத்தில் 3000 புகைப்படக் கலைஞர்களால் கிளிக் - ரோஜா கின்னஸ் சாதனை

By செய்திப்பிரிவு

நடிகரும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா புதிய சாதனை ஒன்றைப் படைத்து, 'வொண்டர் புக் ஆஃப் ரெக்கார்ட்' என்ற கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக 90களில் வலம் வந்தார் நடிகை ரோஜா. இயக்குநர் ஆர்.கே.செல்வமணியுடன் திருமணம் முடித்தவர், பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துகொண்டு, அரசியலில் ஆர்வம் காட்டத்தொடங்கினார்.

இதையடுத்து ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்ட அவர், தற்போது ஆந்திராவின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், புதிய கின்னஸ் சாதனை ஒன்றை அமைச்சர் ரோஜா படைத்துள்ளார்.

அதாவது, ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோ கிராஃபர்களால் புகைப்படம் எடுக்கப்பட்டவர் என்ற பெருமையை பெற்று கின்னஸில் இடம்பிடித்துள்ளார் ரோஜா. இதற்கான ஏற்பாடு விஜயவாடாவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் செய்யப்பட்டிருந்த நிலையில் 3000 போட்டோகிராபர்கள் டிஜிட்டல் கேமராக்களோடு அந்த திருமண மண்டபத்தில் ஆஜராகினர். பின்னர் அங்கு வந்த அமைச்சர் ரோஜா திருமண மண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தோன்றினார். தொடர்ந்து, 3 ஆயிரம் போட்டோகிராஃபர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். ஒன் கிளிக் ஆன் சேம் டைம் என்ற முறையில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் போட்டோகிராபர்களும் அமைச்சர் ரோஜாவை போட்டோ எடுத்தனர்.

இதன் மூலம் முதன்முறையாக 3 ஆயிரம் போட்டோகிராஃபர்களால் புகைப்படம் எடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதனால், 'வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட்' கின்னஸ் சாதனை புத்தகத்தில் அவர் இடம் பிடித்தார். இதையடுத்து அமைச்சர் ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE