நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு தொழில் ரீதியாக புனையப்பட்டது என்று நடிகர் திலீப் தெரிவித்துள்ளார்.
தமிழ், மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை கடந்த 2017-ல் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கு நாளுக்கு நாள் புதிய பரபரப்புகளை கிளப்பிவருகிறது. இந்த வழக்கில் 8-ம் பிரதியாக சேர்க்கப்பட்டுள்ள மலையாள நடிகர் திலீப் மீது காவல்துறை மற்றொரு வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தினமும் ஒரு திருப்பம் நிகழ்கிறது. இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார் நடிகர் திலீப். அதில், "இந்த வழக்கு மலையாள சினிமாவின் சக்திவாய்ந்த ஒரு பிரிவினரால் தனிப்பட்ட பழிவாங்கல் எண்ணத்தின் காரணமாகவும் மற்றும் தொழில் போட்டி காரணமாகவும் புனையப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார் திலீப்.
மேலும், இதில் தனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியருக்கும் கேரள காவல்துறையில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி ஒருவருக்கும் தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.