அருள்நிதியின் 'டைரி' படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் அருள்நிதியின் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள 'டைரி' திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இந்த அறிவிப்பை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் அருள்நிதி வித்தியாசமான கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். டிமான்ட்டி காலனி, பிருந்தாவனம், நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம்.

இப்போது டைரி எனும் தலைப்பில் உருவாகி உள்ள படத்தில் அவர் நடித்துள்ளார். இதன் போஸ்டர்களை பார்க்கும் போது இந்த படம் க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் என தெரிகிறது. இதனை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர் கோப்ரா படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றி உள்ளார் என தெரிகிறது.

இந்நிலையில், இப்போது இந்த படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். கடந்த 2008 வாக்கில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளை கவனித்து வருகிறது இந்த நிறுவனம்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘குருவி’ படத்தை தனது முதல் படமாக தயாரித்து இந்த நிறுவனம். இதுவரை மொத்தம் 15 படங்களை தயாரித்துள்ளது. இதுவரை 31-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது இந்நிறுவனம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE