நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

By செய்திப்பிரிவு

நடிகர் அர்ஜுனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி, உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் 3.30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பெங்களூருவில் உள்ள அர்ஜுனின் சொந்த ஊரான ஜக்குநல்லியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் ஊரில் உள்ள தோட்டத்தில் அர்ஜுனின் தந்தையின் சமாதி அருகே நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், அர்ஜுனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த இரங்கல் குறிப்பில், ''நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் இயற்கை எய்தினார் என்று அறிந்து மிகவும் துயருற்றேன்.

தாயாரின் இழப்பால் தவிக்கும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE