''தேவை ஏற்பட்டால் பாலிவுட் படங்களில் நடிப்பேன்' என தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்துள்ளார். அண்மையில் 'பாலிவுட்டால் என்னை விலைக்கு வாங்க முடியாது' என மகேஷ்பாபு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் டோலிவுட்டைத் தாண்டி, அவரது நடனத்தால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரிட்சியமானவர். அவரது 'புஷ்பா தி ரைஸ்' திரைப்படம் பாலிவுட் ரசிகர்களுக்கு கூடுதலாக அவரை அடையாளப்படுத்த உதவியது.
இந்நிலையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ''இந்தியில் நடிப்பது இப்போதைக்கு என் கம்ஃபர்ட் சோனிலிருந்து கொஞ்சம் விலகி இருக்கிறது. ஆனால் அதற்கான தேவை ஏற்பட்டால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அது உறுதியாக இல்லை. வேறொரு இன்டஸ்ட்ரியில் நடிக்க ரிஸ்க் எடுக்க வேண்டும். தைரியம் தேவை.
நாம் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நாம் மட்டுமே நாயகனாக இருக்க முடியும். நமக்கு வரும் வாய்ப்பு அப்படித்தான் இருக்க வேண்டும். அதை தவிர எனக்கு மற்ற கதாபாத்திரங்களில் ஆர்வமில்லை.
பெரிய ஸ்டார் ஒருவரை இரண்டாம் கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதில் அர்த்தமில்லை. அது படத்தை சேதப்படுத்தும். நீங்கள் ஒரு கதாநாயகனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும்'' என இரண்டு நாயகர்கள் கதைகள் படங்களில் தான் நடிக்க மாட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அண்மையில் நடிகர் மகேஷ்பாபு பாலிவுட்டில் நடிப்பீர்களா என கேட்டதற்கு, 'அவர்களால் என்னை வாங்க முடியாது. என்னை வாங்க முடியாத ஒரு துறையில் வேலை செய்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை' எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.