4 கதாநாயகிகளை மையப்படுத்தி ஐடி துறையின் இருண்ட பக்கங்களை பேசும் வார்டு 126 - இயக்குநர்

By செய்திப்பிரிவு

ஐடி துறையின் இருண்ட பக்கங்களை கதையாக கொண்டு, 4 கதாநாயகிகள் நடிக்கும் படமாக 'வார்டு 126' படம் உருவாகியிருப்பதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.பி டாக்கீஸ் தயாரிப்பில் செல்வகுமார் செல்லப்பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வார்டு 126'. தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தும் விதமாக ரொமான்டிக் இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஆக இது உருவாகியுள்ளது. பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஷ்ரிதா சிவதாஸ், சாந்தினி தமிழரசன், வித்யா பிரதீப், ஸ்ருதி ராமகிருஷ்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

நாயகர்களாக மைக்கேல் தங்கதுரை மற்றும் ஜிஷ்ணு மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். முக்கிய வேடத்தில் சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீமன் ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்கே சுரேஷ் குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள படத்திற்கு வருண் சுனில் இசையமைத்துள்ளார். இவர் சூப்பர் ஹிட்டான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு இசையமைத்தவர். படத்தொகுப்பை தியாகு கவனிக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் செல்வகுமார் செல்லப்பாண்டியன் கூறும்போது, ''ஒவ்வொரு துறையிலும் ஒரு இருண்ட பக்கங்கள் இருக்கிறது. அதே போல் நான் ஐடி துறையில் பணியாற்றிய போது என் கண் முன்னரே நடந்த அதன் இருண்ட பக்கங்களின் நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த கதையை உருவாக்கியுள்ளேன். வார்டு 126 என்ற தலைப்பு ஒரு முடிவின் தொடக்கமாக இருக்கும். படத்தை துவங்கிய சமயத்தில் தான் கரோனா தாக்கம் ஆரம்பித்தது. ஆனால் அதையெல்லாம் தாண்டி பல சவால்களை சந்தித்து படப்பிடிப்பை நடத்தி முடித்தோம். கதை நிகழும் களமான சென்னை, பெங்களூர் மற்றும் டில்லி அருகிலுள்ள நொய்டா ஆகிய இடங்களிலும் பாடல்களை பாண்டிச்சேரியிலும் படமாக்கியுள்ளோம்.

இந்த கதையில் நடித்துள்ள நாயகிகள் அனைவருக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கதையை கேட்கும்போதே உடனே ஒப்புக்கொண்டதுடன் ஒரு புதுமுக இயக்குநர் என்கிற எந்த தயக்கமும் இல்லாமல் படப்பிடிப்பில் மிகுந்த ஒத்துழைப்பு தந்தனர். விரைவில் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

அதேசமயம் ஒடிடியில் படத்தை வெளியிடுவதற்கான வாசலையும் திறந்தே வைத்துள்ளோம்.. பொதுவாக ஓடிடியில் படத்தை வெளியிடுவது சுலபம் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நிஜத்தில் ஓடிடி தளத்தில் படத்தை வெளியிடுவதற்கு நீண்ட நாள் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இந்தமுறையில் படத்தை வெளியிடுவதற்கும் பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE