"படிக்காதவன்" படத்தில் தனுஷின் அப்பாவாக வந்தவர், என்ற சிறுகுறிப்புக்குள் அடங்குபவர் அல்ல பிரதாப் போத்தான். சமரசமற்ற சினிமாக்களை தமிழ் சமூகத்திற்காக படைத்த பல தவிர்க்க முடியாத இயக்குநர்களின் கதாப்பாத்திரத் தேர்வுகளில் ஒருகாலத்தில் முதன்மையானவராக இடம்பிடித்திருந்தவர்தான் பிரதாப்.
80-களில் வந்த தமிழ் சினிமாக்களில் வரும் சில கதாப்பாத்திரங்களின் என்ட்ரி, அந்தப் படத்தின் போக்கை மடைமாற்றும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அப்படியான கதாப்பாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரதாப் போத்தன். தமிழ், மலையாளம், தெலுங்கு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்.
இயக்குநர் மகேந்திரன், பாலுமகேந்திரா போன்ற மனித இயல்புகளையும், குணாதிசங்களையும் படமாக்கும் பேராற்றல் கொண்ட ஆகச்சிறந்த படைப்பாளிகளின் படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியவர் பிரதாப் போத்தன். 1980-ம் ஆண்டும், பிரதாப் போத்தனின் மிக முக்கிய ஆண்டாக அமைந்திருந்தது. அந்த ஆண்டு இயக்குநர் சிகரம் பாலச்சந்திரன் இயக்கத்தில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, பாலு மகேந்திராவின் மூடுபனி, மகேந்திரனின் நெஞ்சத்தை கிள்ளாதே படங்களில் பிரதாப் போத்தன் நடித்திருந்தார்.
குறிப்பாக, மீண்டும் ஒரு காதல் கதை மற்றும் மூடுபனி திரைப்படங்கள் பிரதாப் போத்தனின் சினிமா வாழ்க்கையில், மைல்கற்களாக அமைந்தவை. மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தில் மனநிலை பிறழ்வு கொண்ட, குழந்தைத்தனம் மாறாத நடிப்பை பிரதாப்பும் ராதிகாவும் போட்டிபோட்டு வெளிப்படுத்தியிருப்பர். அதேபோல, மூடுபனி திரைப்படம், ஒரு சைக்கோ க்ரைம் த்ரில்லர் வகை திரைப்படம். படத்தின் இறுதிக்காட்சி வரை நீளும் சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும்போது, உடைந்து அழுது புலம்பும் காட்சியில் அத்தனை ஆத்மார்த்தமான தனது நடிப்பாற்றலை பிரதாப் போத்தன் வெளிப்படுத்தியிருப்பார்.
வெறுமனே கதை நாயகனாகவும், துணை கதாப்பாத்திரங்களிலும் நடித்ததோடு மட்டுமல்ல, மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 10-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது மெட்டா யுனிவர்ஸில் பயணிக்கும் கமல்ஹாசனின் வெற்றி விழா திரைப்படத்தை இயக்கியவர் பிரதாப் போத்தன். இந்தப் படத்தில்தான் முதன்முறையாக ஸ்டெடி கேம் என்ற கேமிரா பயன்படுத்தப்பட்டது. மலையாளத்தில் டெய்சி, ரிதுபீடம், ஒரு யாத்ராமொழி உள்ளிட்ட படங்களையும், தமிழில் மீண்டும் ஒரு காதல் கதை, ஜீவா, மைடியர் மார்த்தாண்டன், ஆத்மா, மகுடம், சீவலப்பேரி பாண்டி, லக்கி மேன் உள்ளிட்ட படங்களையும், தெலுங்கில் சைதன்யா என்ற படத்தையும் இயக்கியவர் பிரதாப்.
பிரதாப் போத்தன், தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய காலக்கட்டத்தில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட மிக குறைவான எண்ணிக்கையிலான நாயகர்களே தமிழ் திரையுலகை ஆளத் தொடங்கியிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, காதல், நடனம், சண்டை என்ற தவிர்க்க முடியாத சினிமா சூத்திரங்களைக் கற்றுக் கொண்டு, கதாநாயகனாகி சினிமா ரசிகர்களை இம்சிக்கவில்லை அவர். மாறாக, சிறந்த இயக்குநர்களின் காலம்தோறும் பேசப்படும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து, திரையுலகில் தனக்கான இடத்தை தானே செதுக்கியவர்.
பன்னீர் புஷ்பங்களில் வரும் ஆசிரியர், சிந்துபைரவியில் சுஹாசினியை துரத்தும் காதலர், பிரியசகி படத்தில் வரும் மாமனார், ராம் திரைப்படத்தில் வரும் சைக்கியாட்ரிஸ்ட், என எந்த கதாப்பாத்திரத்திலும் கனகச்சிதமாக பொருந்திக் கொள்ளும் பிரதாப் போத்தன், 44 ஆண்டு கால தனது கலைப் பயணத்தை இன்றுடன் நிறுத்திக் கொண்டார்.