சம்பளம் வாங்காமல் சிறப்புத் தோற்றம் - ‘ஜவான்’ படத்தில் விஜய்?

By செய்திப்பிரிவு

அட்லீ மற்றும் ஷாருக்கானுடனான நட்பின் காரணமாக 'ஜவான்' படத்தில் சம்பளம் எதுவும் வாங்காமல் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'ராஜா ராணி', 'தெறி', 'மெர்சல்', 'பிகில்' ஆகிய படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக ‘ஜவான்’ இந்திப் படத்தை இயக்கி வருகிறார். பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பிரியாமணி, யோகிபாபு, உள்ளிட்ட தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். நயன்தாரா முதன்முறையாக பாலிவுட் படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், ஷாருக்கான் இரட்டை வேடத்திலும் நடிக்க உள்ளனர். படம் அடுத்த ஆண்டு ஜூன் 2-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தில் கேமியோ ரோலுக்காக சம்பளம் எதுவும் வாங்காமல் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அட்லீ மற்றும் ஷாருக்கான் இருவருடனான நட்பின் காரணமாக படத்தில் ஊதியம் வேண்டாம் என விஜய் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ஷாருக்கானின் 'ரா ஒன்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிகர் ரஜினி நடித்திருந்தார். அந்த வகையில் தற்போது ஷாருக்கானுடன் விஜய் திரையை பகிர்ந்துகொள்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE