‘சுந்தரபாண்டியன்’ முதல் ‘விக்ரம்’ வரை - ‘வில்லன்’ விஜய் சேதுபதியின் வெவ்வேறு லெவல்கள்!

By செய்திப்பிரிவு

சினிமா எனும் கூட்டுக்கலைக்குள் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டு நடிக்கும் நடிகர்கள் மட்டுமே காலம் கடந்தும் போற்றப்படுகின்றனர். மலையாள சினிமாவை எடுத்துக்கொண்டால், அந்த நடிகர்கள் யாருக்கும் எந்த இமேஜும் இருக்காது. மம்முட்டியால் 'புழு' படத்திலும் நடிக்க முடியும். அதே சமயம், 'பீஷ்ம பர்வம்', 'சிபிஐ 5; தி ப்ரைன்' போன்ற படங்களிலும் நடிக்க முடியும். இன்றைக்கும் 'புழு' போன்ற நெகட்டிவான கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகரால் எப்படி நடிக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.

அதுதான் ஒரு சிறந்த கலைஞனுக்கான அந்தஸ்தை பெற்றுத் தருகிறது. அப்படி தமிழில் எடுத்துக்கொண்டால் விஜய் சேதுபதியை தாராளமாக அந்த இடத்தில் பொருத்திப் பார்க்க முடியும். 'காத்து வாக்குல காதல்' என லவ்வர் பாயாகவும், 'விக்ரம்' படத்தில் வெறித்தனமான வில்லனாகவும் ஒரே சமயத்தில் இருவேறு படங்களை கொடுக்க முடியும். எந்த வித இமேஜ் குறித்தும் கவலைப்படாமல் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்கும் விஜய் சேதுபதி, தன்னுடைய எதிர்மறை கதாபாத்திர தேர்வின் மூலம் ரசிகர்களை ஆட்கொண்டிருப்பது குறித்து பார்ப்போம்.

'சுந்தரப்பாண்டியன்' (2012) - பிரபாகரன் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளியான 'சுந்தரபாண்டியன்' படத்தில் சசிகுமார் நாயகனாக நடித்திருப்பார். லக்‌ஷ்மி மேனன், சூரி நடித்திருந்த இப்படத்தில், விஜய் சேதுபதி இரண்டாம் பாதியில் மட்டுமே தோன்றியிருப்பார். முன்னணி நாயகனாக அவர் வலம் வந்த பிறகு, இப்படத்தைப் பார்ந்த பலரும், 'விஜய்சேதுபதியா இதுல நடிச்சது' என ஆச்சரியமடைந்தனர்.

ஆனால், அந்தப் படம் வந்தபோதே, தனது அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களை வெறியேற்றியிருப்பார். அவரது கதாபாத்திரம் திரைத்துறை விமர்சகர்களிடையே கவனம் பெற்றது. முண்ணனி நாயகனாக இல்லாத காலத்தில் எதிர்மறை கதாபாத்திரமாக நடித்திருந்தவர், பின்னாளில் நாயக பிம்பத்துக்குள் பொருந்தியபோதும் கூட மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரங்களை நோக்கி நடைபோடுவார் என யாரும் எதிர்பார்க்கவில்லை.


'விக்ரம் வேதா' (2017) - இது 'சுந்தரபாண்டியன்' போன்ற காலகட்டமல்ல. இப்போது விஜய் சேதுபதி ரசிகர்களிடையே நன்கு பரிச்சயமானவர். இருந்தாலும் அவர் பரிட்சாத்திய முயற்சியில் இறங்கினார். உண்மையில் 'விக்ரம் வேதா' போன்ற கதைக்களத்துக்கு அழுத்தமான எதிர்மறை கதாபாத்திரம் தேவை. முன்னணி நடிகர்கள் பலரும் அந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க தவறுவதால், திரை ரசிகர்களுக்கு ஒரு நல்ல திரைவிருந்து மிஸ்ஸாகிவிடுகிறது.

அந்த ஏக்கத்தையெல்லாம் போக்க 'கத சொல்லட்டா சார்' என வந்து நின்றார் விஜய் சேதுபதி. புஷ்கர் காயத்ரி எழுத்தில் நாயகனுக்கு இணையான வெயிட்டான கதாபாத்திரத்துக்கு கூடுதல் கனத்தை சேர்த்திருப்பார். சொல்லப்போனால், அவரது இன்ட்ரோ காட்சியும் அதையொட்டிய பிஜிஎம்மும் மாதவனுக்கான இன்ட்ரோவை விட மெர்சலாக இருக்கும்.

'பேட்ட' (2019) - இந்த முறை ரஜினியுடன். விஜய்சேதுபதிக்கு குறைந்த ஸ்கிரீன் ஸ்பேஸ் தான். ஆனால், அவர் அது குறித்தெல்லாம் கவலைப்படவில்லை. தன்னுடைய நடிப்பால் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முடியுமா என்று மட்டுமே பார்த்தார். எத்தனைக் காட்சிகள் அவருக்காக எழுதப்பட்டதோ அத்தனைக் காட்சியிலும் தன்னை நிரூபிக்கும் அளவிற்கான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

ஒரு பக்கம் ரஜினி, மறுபக்கம் நவாசுதீன் சித்திக் இருவருக்கும் இடையில் அழுத்தமான நடிப்பை கொடுத்தாகவேண்டிய கட்டாயம். ஆனால், அதை அசால்டாக செய்திருப்பார் விஜய் சேதுபதி எனும் 'ஜித்து'.

'மாஸ்டர்' (2021) - 'விக்ரம் வேதா'விலிருந்து எடுத்துக்கொண்டால் இரண்டான்டுகளுக்கு ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்திருப்பார் விஜய் சேதுபதி. அப்படி பேட்ட படத்துக்கு பிறகு வந்தது தான் 'மாஸ்டர்'.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படத்தில் விஜயை ஃபேஸ்ஆப் செய்யும் காட்சியை ட்ரெய்லரின் பார்த்த ரசிர்களுக்கு வெறியூட்டினார். படத்தை பார்த்தேயாகவேண்டும் என திரையரங்குக்குள் நுழைந்தவர்கள் பவானி கதாபாத்திரத்தால் கட்டிப்போட்டிருப்பார்.

சில இடங்களில் விஜயை ஓவர் டேக் செய்ய முயன்றிருப்பார். அவர் குளிக்கும் காட்சியில் பேசும் வசனம், 'நெருப்பு கோழி' வசனம், இறுதி சண்டைக் காட்சி என திரையரங்கே சத்தத்தால் அலறித்துடித்தது.

விக்ரம் (2022) - லோகேஷுடன் இரண்டாவது படம். மீண்டுமொரு எதிர்மறை கதாபாத்திரம். லோகேஷ் எழுதும்போதே விஜய் சேதுபதி தான் வில்லன் என முடிவெடுத்து எழுதுவார் போல. முறுக்கேறிய உடலுடன் சிக்ஸ் பேக்குடன் எல்லாம் இன்ட்ரோ காட்சியில் அவர் தோன்றிவிடவில்லை. மாறாக தன்னுடைய உடல் எப்படியோ அப்படியே எந்தவித மாற்றமுமின்றி எதார்த்தமாக தோன்றுவார்.

அவரின் நாயக பிம்பத்தின் சிதைவு குறித்தெல்லாம் கவலைப்படாமல், ஒருவரால் எப்படி இப்படியொரு தொடக்க காட்சியில் தோன்ற முடியும் என பார்வையாளர்களுக்கு எண்ண வைக்கிறது. ஆனால், முழுமையாக தன்னை நடிப்புக்கு தாரைவார்த்த கலைஞனுக்கு நடிப்பு மட்டுமே ஆத்மார்த்தம். அவரது ஈர்க்ககூடிய உடல்மொழியும், நடையும் தமிழ் சினிமாவின் அழுத்தமான வில்லன் கதாபாத்திரத்தை பதிய வைத்திருக்கும்.

உண்மையில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒரு தண்ணீரைப்போல. எந்த கதாபாத்திரத்தில் பொருத்துகிறோமோ அதற்கு தகுந்தாற்போல தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் வாய்ந்தவர். மேற்கண்ட படைப்புகள் எல்லாவற்றிலும் அப்படி தன்னை தகவமைத்துக்கொண்டதனால் உருவானது தான். இன்னும் பல அழுத்தமான வில்லன் கேரக்டருக்காக திரையுலகம் ஏங்கி கிடக்கிறது விஜய் சேதுபதி அவர்களே!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE