“சில நேரங்களில் இப்படி நடக்கும்” - ஷாருக்கான் படத்தில் இருந்து விலகிய ஒளிப்பதிவாளர்

By செய்திப்பிரிவு

ஷாருக்கானின் புதிய படமான 'டங்கி' (dunki) படத்திலிருந்து ஒளிப்பதிவாளர் அமித் ராய் விலகியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் 'ஜவான்' படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான். நயன்தாரா நடிக்கும் இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்தப் படத்திற்கிடையே '3இடியட்ஸ்', 'பீகே', 'சஞ்சு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ்குமார் ஹிரானி படத்தில் நடித்து வருகிறார் ஷாருக்கான்.

'டங்கி' (dunki)என பெயரிடப்பட்டுள்ள இப்படம், அடுத்த வருடம் டிசம்பர் 22-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்தப் படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் அமித் ராய் விலகியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ''என்னால் இதற்கு மேலும் டங்கி (Dunki) படத்தில் பணிபுரிய முடியாது. 18,19 நாட்கள் அந்தப் படத்தில் பணியாற்றினேன். படத்தில் ராஜு ஹிரானிக்கும் எனக்கும் இடையே இரு வேறு நிலைபாடுகள் இருந்தன. எங்கள் இருவராலும் ஒரே கோணத்தில் பார்க்க முடியவில்லை. அதேசமயம் இணக்கமான முறையில் தான் நாங்கள் இருவரும் பிரிந்தோம்.

இருவருக்குமிடையே உரசல் ஏற்படும் நிலைக்கு செல்லாமல் தவிரக்கவே முன்னெச்சரிக்கையாக, நாங்கள் பேசிப் பிரிந்துவிட்டோம். சில நேரங்களில் அப்படி நடக்கும். 'பாபா போல்டா ஹை பாஸ் ஹோ கயா' பாடலை ஹிரானிக்காக படமாக்கியிருந்தேன். அப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம். அவருக்காக சில விளம்பரங்களையும் முடித்து கொடுத்துள்ளேன். படைப்பில் சில வேறுபாடுகள் இருக்கும். இதுவரையில் 'டங்கி' படத்தில் நான் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் இடம்பெறும்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE