“ஒற்றைத் தொலைபேசி அழைப்பிலேயே நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு” - ஹன்சிகா நெகிழ்ச்சி

By செய்திப்பிரிவு

“ஒரே ஒரு ஃபோன்கால் தான் செய்தேன். உடனே சிம்பு நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கு நான் நன்றிகடன்பட்டுள்ளேன்' என்று நடிகை ஹன்சிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா நடித்து வரும் திரைப்படம் 'மஹா'. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்களை கார்கி, விவேகா, சௌந்தரராஜான் எழுத ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வரும் 22-ம் தேதி வெளியாகும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகை ஹன்சிகா, நடிகர் ஆரி, இயக்குனர்கள் சீனு ராமசாமி, லக்‌ஷ்மன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், “'மஹா' திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் படம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாகப் பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குநர் சிறப்பான திரைப்படத்தையும், ஒரு முக்கியமான கருத்தையும் தந்துள்ளார். நடிகர் சிம்பு சிறந்த நடிகர், அவர் இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பினை வழங்கியுள்ளார்'' என்றார்.

இறுதியாக பேசிய நடிகை ஹன்சிகா, ''மஹா படம் எனக்கு வந்தபோது, இது எனது 50-ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50-ஆவது படமாக மஹா திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்தப் படத்தில் நடிக்க என்னுடைய தாய் மிக முக்கியக் காரணம். அவர்தான், 'நீ 50-வது படம் நடித்தால் அது மஹாவாகதான் இருக்க வேண்டும்' என்று கூறினார்.

'மஹா' படத்தில் நடிப்பதற்காக சிம்புவிற்கு ஒரே ஒரு கால் தான் செய்தேன். அவர் உடனே சம்மதம் தெரிவித்து நடித்துக் கொடுத்தார். அவர் இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE