சந்தானத்தின் 'குலுகுலு' படத்தின் திரையரங்க உரிமையை கைப்பற்றிய ரெட் ஜெயண்ட் மூவிஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: நடிகர் சந்தானத்தின் நடிப்பில் வரும் 29-ஆம் தேதி வெளியாக உள்ள 'குலுகுலு' திரைப்படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது ரெட் ஜெயண்ட் மூவிஸ். இந்த அறிவிப்பை அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

நகைச்சுவை நடிகராக நடித்து வந்த நடிகர் சந்தானம் கதையின் பிரதான நாயகனாக இப்போது நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி உள்ள 'குலுகுலு' திரைப்படத்தை இயக்குனர் ரத்ன குமார் இயக்கி உள்ளார். இவர் மேயாத மான், ஆடை போன்ற படங்களை இயக்கியவர். அது தவிர மாஸ்டர் மற்றும் விக்ரம் போன்ற படங்களின் திரைக்கதையிலும் பணியாற்றி உள்ளார்.

'குலுகுலு' திரைப்படம் ஒரு பயணத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என தெரிகிறது. சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் சாட்டிலைட் ஒளிபரப்பு உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இந்நிலையில், இப்போது இந்த படத்தின் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றி உள்ளது உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ். கடந்த 2008 வாக்கில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக பணிகளை கவனித்து வருகிறது இந்த நிறுவனம்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘குருவி’ படத்தை தனது முதல் படமாக தயாரித்து இந்த நிறுவனம். இதுவரை மொத்தம் 15 படங்களை தயாரித்துள்ளது. இதுவரை 30-க்கும் மேற்பட்ட படங்களை வெளியிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE