குப்ரா செய்த் ‘ரெடி’, ‘சுல்தான்’, ‘கல்லிபாய்’ உள்ளிட்ட இந்திப் படங்களில் நடித்துள்ளார் குப்ரா செய்த். 2018-இல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘சேக்ரட் கேம்ஸ்’ வலைத் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அந்தத் தொடரில் அவர் திருநங்கையாக நடித்திருந்தார்.
தற்போது குப்ரா செய்த்தின் சுயசரிதை, ‘ஓபன் புக்: நாட் கொய்ட் அ மெமாய்ர்’ (Open Book: Not Quite a Memoir) வெளியாகியுள்ளது. குப்ராவின் சுயசரிதை சில இடங்களில் படிப்பவரைக் குற்றவுணர்வுள்ளாக்கும் அளவுக்கு நேர்மையாக இருப்பதாக நூல் குறித்து எழுதப்பட்டுள்ள மதிப்புரைகள் கூறுகின்றன.
சிறுவயதில் தன் குடும்ப நண்பர் ஒருவரால் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதைச் சுயசரிதையில் பதிவுசெய்துள்ளார் குப்ரா. தனக்கு நடந்த பாலியல் சித்திரவதையை வெளியே சொல்வதற்குத் தன் அம்மாவிடமிருந்தே எதிர்ப்பைச் சந்தித்தாகச் சுயசரிதை குறித்த உரையாடல் ஒன்றில் கூறியிருக்கிறார்.
பெண்கள் தமக்கு நிகழ்ந்த பாலியல் சித்திரவதையை வெளியே சொல்ல அஞ்சுவது தவறுசெய்யும் ஆண்களை ஊக்கப்படுத்துகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும், தன் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் சித்திரவதைத் தன் வாழ்க்கை என்னும் புத்தகத்தில் ஓர் அத்தியாயம்தான் என்றும் அதுவே புத்தகமாக மாறத் தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறியிருக்கிறார்.
‘சிறுவயதில் நிகழும் பாலியல் சித்திரவதையால் ஏற்படும் மன உளைச்சல் பலருக்கு வாழ்க்கை முழுவதும் தொடரக்கூடும். ஆனால், அது ஒருவரது ஆளுமையைச் சிதைத்து, வளர்ச்சியைத் தடுப்பதாக மாறவிட வேண்டியதில்லை’ என்னும் நம்பிக்கையை இந்த அணுகுமுறையின் மூலம் குப்ரா செய்த் விதைத்திருக்கிறார்.
திருமணமாகாத பெண் ஒருவர் பாலியல் உறவில் ஈடுபடுவதும் அதனால் கருத்தரிப்பதும் அந்தக் கருவைக் கலைப்பது பற்றி எல்லாம் குப்ரா செய்த் கவலைப்படவில்லை. கருக்கலைப்பு செய்துகொண்டது குறித்த வருத்தமோ குற்றவுணர்வோ தனக்கு எப்போதும் இல்லை என்று கூறியிருக்கிறார்.
தற்போது 39 வயதாகும் குப்ரா செய்த் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்போதும் தான் குழந்தை பெற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
> இது, இந்து தமிழ் திசை ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்