“சாரி, அரண்மனையில் அனுமதியில்லை” - ‘வந்தியத்தேவன்’ கார்த்தி ட்வீட்டுக்கு ‘குந்தவை’ த்ரிஷா பதில்

By செய்திப்பிரிவு

'சாரி அரண்மனையில் ஸ்மார்ட்போனுக்கு அனுமதியில்லை' என ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா, வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்திக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பொன்னியின் செல்வன்'. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலின் திரை ஆக்கம்தான் இந்தப் படம்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாகும் இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். முதல் பாகம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. அண்மையில் 'வருகிறான் சோழன்' என்ற தலைப்புடன் 'பொன்னியின் செல்வன்' படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது.

இதையடுத்து, இந்தப் படத்தில், சோழப் பேரரசின் பட்டத்து இளவரசன் அதித்த கரிகாலன் வேடத்தில் நடிக்கும் விக்ரமின் தோற்றத்தைப் படக்குழு ட்விட்டரில் வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தியின் தோற்றமும் பழுவூர் ராணி நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய் தோற்றமும் வெளியானது.

அதேபோல இன்று, குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷாவின் தோற்றம் வெளியிடபட்டு அதில், ''ஆண்களின் உலகில் தைரியமான பெண். இளவரசி குந்தவை'' என பதிவிடப்பட்டுள்ளது.

இந்தப் போஸ்டரை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவை மேற்கொள்காட்டி, நடிகர் கார்த்தி, ''இளவரசி, ப்ளீஸ் உங்களது லைவ் லோகேஷனை அனுப்புங்கள். உங்கள் அண்ணனின் ஓலையை கொடுக்க வேண்டும்!'' என வேடிக்கையாக கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்திருக்கும் த்ரிஷா, ''சாரி அரண்மனையில் ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் மனிதர்களுக்கு அனுமதியில்லை'' என பதிவிட்டுள்ளார். இருவரின் இந்த உரையாடலை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE