இப்படியொரு திரைப்படம் கொடுத்தற்காக மாதவனுக்கு நன்றிகள் - ரஜினி பாராட்டு

By செய்திப்பிரிவு

'ராக்கெட்ரி நம்பி விளைவு' படத்தை கொடுத்ததற்காக நன்றிகள் என நடிகர் மாதவனுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ராக்கெட்ரி: நம்பி விளைவு'. இந்தப் படத்தை நடிகர் மாதவனே நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக உருவாகியுள்ள படம், 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' என பெயரிடப்பட்டது. தமிழில் 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடித்துள்ளார். சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இப்படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ராக்கெட்ரி திரைப்படம் - அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் - குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக நடித்துப் படமாக்கி, இயக்குநராக தனது முதல் படத்திலேயே தலை சிறந்த இயக்குநர்களுக்கு இணையான தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தைக் கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும், பாராட்டுகளும்'' என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE