விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டும்: நடிகர் சூரி வாழ்த்து

By செய்திப்பிரிவு

'தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்' என விஜயகாந்த் நலம் பெற வேண்டி நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அண்மையில் தேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "நீண்ட வருடங்களாக இருக்கும் நீரிழிவு பிரச்சினையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாததால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நேற்று விரல் அகற்றப்பட்டது. மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தற்போது நலமுடன் உள்ளார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிசிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.விஜயகாந்த் உடல் நலம் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் பொய்யான வதந்திகளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் உடல்நலம் பெற பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில், ''தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE