'அதை ஒரு சண்டையாக நான் நினைக்கவில்லை' - அஜய் தேவ்கன் ட்விட்டர் விவாதம்; சுதீப் விளக்கம்

By செய்திப்பிரிவு

அஜய் தேவ்கனுடன் இந்தி மொழி தொடர்பான ட்விட்டர் விவாதம் குறித்து நடிகர் சுதீப் விளக்கமளித்துள்ளார்.

அனூப் பண்டாரி இயக்கத்தில் கிச்சா சுதீப் நடித்திருக்கும் கன்னடப் படம் 'விக்ராந்த் ரோணா', 3டியில் உருவான இப்படம் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகளிலும் டப் செய்யப்படுள்ளது. ஆங்கிலத்திலும் கூட வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்தப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சுதீப், ''சினிமா மேல் எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அது எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்லும். அதுதான் இப்போது எங்களை இங்கே அழைத்து வந்திருக்கிறது.

இந்தப் படம் உருவாக என் வாழ்க்கை எனக்கு இன்ஸ்பிரேஷன் கொடுத்தது. நான்கு வருடமாக இந்தப் படத்தை உருவாக்கினோம். மேலும் இதனை 3டியில் உருவாக்க விரும்பிய காரணம், படத்துக்காக பெரிய உலகத்தைப் படைத்திருக்கிறோம். அதற்குள் பார்வையாளர்களை அழைத்து வருவதே நோக்கம். இதற்கடுத்ததாகவும் நான் நடிக்கும் 'பில்லா ரங்கா பாட்ஷா' படத்தையும் அனூப் தான் இயக்குகிறார்'' என்றார்.

பின்னர் அவரிடம் இந்தி மொழி தொடர்பாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கானுடன் ட்விட்டரில் ஏற்பட்ட கருத்து மோதல் பற்றி கேட்கப்பட்டது.

``நான் அதை ஒரு சண்டையாக பார்க்கவில்லை. அஜய் தேவ்கன், என் நண்பர்தான். என்னிடம் ஏதாவது கேட்க வேண்டும் என்று நினைத்தால் போனில் கேட்டிருக்கலாம். பொதுவெளியில் அவர் கேட்டதால் நானும் அதில் பதில் சொன்னேன். நான் அனைவருக்கும் மதிப்பு கொடுக்கக் கூடியவன். அஜய்தேவ்கனுக்குத் தவறான புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை உணர முடிந்தது. பிறகுதான், என் மொழியில் நான் ட்வீட் செய்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? என்று சொன்னேன். அவ்வளவுதான். மற்றபடி அதை ஒரு சண்டை என நான் நினைக்கவில்லை'' என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE