சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் 'சூரரைப் போற்று' தமிழில் வெளியான இந்தப் படம் பெரும் வரவேற்பை பெற்றது.
கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாகவும், அதனை இயக்குநர் சுதா கொங்கராவே இயக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியில் இந்தப் படத்தை விக்ரம் மல்ஹோத்ராவுடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இதில், அக்ஷய் குமார் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார்.
இதனிடையே, இந்தி ரீமேக்கில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில், படப்பிடிப்பு தளத்தில் அக்ஷய் குமாருடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ள சூர்யா, "அக்ஷய் சார் உங்களை இந்த படத்தில் வீரராகப் பார்ப்பது எனக்குப் பழைய நினைவுகளை நியாபகப்படுத்துகிறது. நம் கதையை மீண்டும் உயிர்ப்பித்து மிக அழகாக 'மாறா'வாக சுதா கொங்கரா உருவாக்கியுள்ளார். 'சூரரைப் போற்று' பட இந்தி ரீமேக்கில் எனது கேமியோ ரோலையும், இந்தப் படப்பிடிப்பு குழுவினருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் மிகவும் மகிழ்ச்சியாக செலவு செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள அக்ஷய் குமார், "நன்றி பிரதர், சூரரைப் போற்று போன்ற ஒரு உத்வேகக் கதையின் படப்பிடிப்பின் ஒவ்வொரு தருணத்தையும் விரும்புகிறேன். எங்களின் ஸ்ட்ரிக்ட் கேப்டன் சுதா கொங்கரா இருந்தாலும் சென்னையில் இருப்பது ஒருவகை காதலை வெளிப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சென்னையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துவருவது வெளிப்படுத்தியுள்ளார் அக்ஷய் குமார்.