'எனக்கு முழு திருப்தியை கொடுத்த படம் இது' - 'வீட்ல விசேஷம்' அனுபவம் குறித்து நடிகை ஊர்வசி

By செய்திப்பிரிவு

நடிகர் ஆர்.ஜே பாலாஜி கடந்த 2019-ம் ஆண்டு 'எல்.கே.ஜி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து நயன்தாராவை வைத்து 'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கினார். இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்த நிலையில், தற்போது மூன்றாவதாக 'வீட்ல விசேஷம்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு அமித் ரவீந்திரநாத் இயக்கத்தில் வெளியான 'பதாய் ஹோ' படம் இந்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. காமெடி கதைக்கொண்ட இப்படத்தில் ஆயூஷ்மான் குரானா, நீனா குப்தா, சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்டோர் நடித்து பாராட்டுகளை குவித்தனர். இதன் தமிழ் ரீமேக் உரிமையை தயாரிப்பாளரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கபூர் பெற்றிருந்தார். அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, சத்யராஜ் நடித்துள்ள இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது.

இந்திய திரையுலகில் மிக முக்கியமான நடிகையாக போற்றப்படும் நடிகை ஊர்வசி “வீட்ல விசேஷம்” திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில், “வீட்ல விசேஷம் திரைப்படம் எனக்கு முழு திருப்தியை கொடுத்தது. மிகவும் அரிதாகவே, ஒரு கலைஞருக்கு மதிப்புமிக்க கதை, தெளிவான பார்வை கொண்ட நல்ல திரைப்பட இயக்குநர்கள் மற்றும் அற்புதமான சக நடிகர்கள் கொண்ட ஒரு படம் கிடைக்கிறது. இந்தப் படம் எனக்கு அப்படிப்பட்ட ஒரு படமாக அமைந்தது.

நான் மலையாளத்தில் இதே போன்ற திரைப்படங்களை செய்திருந்தாலும், இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இந்த படத்தினுடைய படப்பிடிப்பின் ஒவ்வொரு நொடியும் என்னை உற்சாகப்படுத்தியது. சத்யராஜ் சாருடன் திரையை பகிரும் வாய்ப்பு ஒரு முக்கியமான காரணம். நல்ல நடத்தை மற்றும் நடிப்பின் மூலமாக மற்றவர்களை ஈர்க்கும் திறமை பெற்ற நடிகர்களுடன்பணியாற்றுவதை நான் எப்போதும் ரசிப்பேன். அப்படிபட்ட ஒரு நடிகர் சத்யராஜ்.

இது எனது பாத்திரத்தையும் சிறப்பாக வழங்க உதவியது. நான் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்புவதற்கு மற்றொரு காரணம் என்னவென்றால், ஆர்.ஜே பாலாஜி தான். அவருடைய படங்களில் எனக்கு ஒரு குறிப்பிடத்தக்க, தனித்துவமான பாத்திரம் கிடைக்கும். ஆர்.ஜே பாலாஜி புத்திசாலித்தனமிக்க ஒரு தெளிவான திரைப்பட இயக்குநர். மேலும் அவரது குழுவினரிடமிருந்து சிறந்த உழைப்பை பெற்று விடுவார். ஆர்.ஜே பாலாஜி ஜாலியாகவும் துடிப்பாகவும் இருக்கும் போது, ​​சரவணன் அமைதியாகவும், இறுதி வெளியீட்டைப் பெறுவதில் கெட்டிகாரராகவும் இருக்கிறார்.

திரைப்பட இயக்குநர்களின் இந்த கலவையானது படப்பிடிப்பின் போது குழுவில் உள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் நிலைமையை சமாமாக வைத்துக்கொண்டது. சமீப காலமாக, ஒரு குறிப்பிட்ட குழுவினரின் ஆர்வத்தையும் ரசனையையும் பூர்த்தி செய்யும் திரைப்படங்களை நாம் பார்க்கிறோம். இருப்பினும், வீட்ல விசேஷம் திரையரங்குகளில் அனைவரையும் மகிழ்விக்கும் மற்றும் திருப்திப்படுத்தும் படமாக இருக்கும்” என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE