‘சந்திரமுகி 2’ படத்தை தயாரிக்கும் லைகா - அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'சந்திரமுகி 2' படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க இருப்பதாகவும், முதல் பாகத்தை எடுத்த பி.வாசு, இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், 'சந்திரமுகி' இரண்டாம் பாகத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, பி.வாசு இயக்கும் இந்தப் படத்தை, லைகா நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார்.

முதல் பாகத்தைப்போல, இந்த படத்திலும் நடிகர் வடிவேலு நடிக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்கிறார். தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE