விபத்தில் உயிரிழந்த ரசிகரின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற ஜெயம் ரவி

By செய்திப்பிரிவு

மதுரை: விபத்தில் உயிரிழந்த தனது ரசிகர் மன்றத் தலைவரின் இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார் நடிகர் 'ஜெயம்' ரவி. அத்துடன், குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் நிலையூரைச் சேர்ந்தவர் செந்தில். திருமணமான இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் மதுரை மாவட்டத் தலைவராக செந்தில் இருந்து வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக ஜெயம் ரவியின் தீவிர ரசிகராக இருக்கும் இவர், அண்மையில் விபத்து ஒன்றில் சிக்கி உயிரிழந்தார்.

இந்நிலையில், தனது புதிய திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் இருந்த நடிகர் ஜெயம் ரவி தனது ரசிகரின் மறைவு குறித்து செய்தி அறிந்து நேற்று மாலை மதுரை நிலையூரில் உள்ள செந்திலின் வீட்டிற்கு நேரில் சென்றார். அவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செந்திலின் மனைவி மற்றும் இரு குழந்தைகளைச் சந்தித்து அவர் ஆறுதல் தெரிவித்தார். மேலும், செந்திலின் குடும்ப வறுமையைப் போக்க ரூ.5 லட்சத்தை வங்கி கணக்கில் டெபாசிட் செய்வதாகவும், இரு குழந்தைகளுக்குமான கல்விச் செலவை முழுமையாக ஏற்பதாகவும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE